70 ஆண்டு கால மரங்களால் சோலைவனமான ரோடு: வடமலைக்குறிச்சி கிராம மக்கள் அசத்தல்
பெருகி வரும் தொழிற்சாலைகள் வாகனங்கள் மூலம் வெளியேற்றப்படும் கார்பன்-டை-ஆக்ஸைடு அளவு அதிகரிப்பதால் வளிமண்டலத்தில் வெப்பத்தின் தாக்கத்தை அதிகரித்து மழை, வெயில், பனி ஆகிய காலநிலைகளில் மாற்றம் ஏற் படுகிறது. காடுகளை அழித்தல், விளை நிலங்களை பிளாட்டுகளாக மாற்றுதல் போன்றவற்றால் பருவநிலையின் சமநிலை தவறிவிட்டது. இதனால் உலகில் உள்ள அனைத்து உயிர்களும் பாதிக்கப்படுகின்றன. வனப்பரப்பை அதிகப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து பல நடவடிக்கைகளை எடுத்தாலும், இந்த பிரச்னைக்கு நிரந்தர தீர்வு எடுக்கப்படவில்லை. கல்லுாரிகள், பள்ளிகள் உள்ளிட்ட இடங்களில் பயிலும் மாணவர்களுக்கு வளர்பருவத்திலேயே இயற்கை மாசுபடுத் தாமல் வாழ்கையை வாழ்தல், இயற்கையை பேணுதல் போன்றவற்றை பற்றி தெளிவான அறிவுரை வழங்குவது இன்றியமையாததாகிறது. விருதுநகர் அருகே வடமலைக்குறிச்சி ஊராட்சியில் கடந்த 70 ஆண்டுகளுக்கு முன்பு மண்ரோட்டின் இருபுறமும் 100க்கும் மேற்பட்ட புளியமரங்கள் நடவு செய்யப்பட்டு வளர்க்கப்பட்டது. இந்த மரக்கன்றுகளை அப்போது படித்த பள்ளி மாணவர்களால் கிராம மக்கள் நடவு செய்தனர். இவற்றை பராமரிக்க தனியாக இருநபர்களுக்கு ஊதியம் கொடுத்து மக்கள் பராமரித்து வளர்த்தனர். மண் ரோடு நாளடைவில் தார் ரோடாக மாறியது. ரோட்டின் இருபுறமும் நடவு செய்த மரங்களும் தற்போது நன்கு வளர்ந்து நிழல் தரும் அளவிற்கு வளர்ந்து சோலைவனமாக காட்சியளிக்கிறது. விருதுநகரில் வேறு எந்த பகுதிக்கும் செல்லும் போதும் இது போன்ற இயற்கை அழகை காண முடியாது என்ற அளவிற்கு ரோட்டின் இருபுறமும் மரங்கள் அடர்ந்து வளர்ந்து நிறைந்துள்ளது. இதனால் பலரும் புகைப்படம் எடுப்பதற்காக வாகனங்களில் வந்து செல்கின்றனர்.