பட்டாசு விபத்தில் பலியானோர் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம்; ஜாமின் கோரிய வழக்கில் உத்தரவு
ஸ்ரீவில்லிபுத்துார் : விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே எம்.புதுப்பட்டியில் நடந்த பட்டாசு விபத்தில் பலியான 4 பேர் குடும்பத்திற்கு கூடுதல் நிவாரணமாக ரூ.10 லட்சம் வழங்க வேண்டும் என கைதானோர் ஜாமின் வழக்கில் முதன்மை மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது.ஏப்.26ல் எம்.புதுப்பட்டி அருகே நெடுங்குளத்தில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 4 பெண் தொழிலாளிகள் இறந்தனர். ஆறு பேர் படுகாயமடைந்தனர். இச்சம்பவம் தொடர்பாக எம்.புதுப்பட்டி போலீசார் ஆலை உரிமையாளர் ஜெய்சங்கர், மேனேஜர் ராஜேஷ், போர்மேன் சுப்புராஜ் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்தனர். ராஜேஷ், சுப்புராஜ் கைது செய்யப்பட்டனர்.இருவரும் ஜாமின் கோரி ஸ்ரீவில்லிபுத்துார் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் மனு செய்தனர். இறந்தவர்களின் குடும்பத்திற்கு கூடுதல் நிவாரணமாக தலா ரூ. 10 லட்சம், படுகாயம் அடைந்தவருக்கு தலா ரூ.5 லட்சம், சாதாரண காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ. 2 லட்சம் வழங்க உத்தரவிட்டு ஜாமின் மனுவை அனுமதித்து நீதிபதி ஜெயக்குமார் உத்தரவிட்டார்.