உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / அர்ஜூனா நதியை துார்வாரும் பணிகள்.. கிடப்பில்! 169 கண்மாய்கள், குளங்கள் பாதிப்பு

அர்ஜூனா நதியை துார்வாரும் பணிகள்.. கிடப்பில்! 169 கண்மாய்கள், குளங்கள் பாதிப்பு

ஸ்ரீவில்லிபுத்துார் அருகே வத்திராயிருப்பு அர்ஜுனாபுரம் மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் உற்பத்தியாகும் அர்ஜுனா நிதி மலைப்பகுதியில் 195 ச.கி.மீ.,ம் விருதுநகர் மாவட்டத்தில் வத்திராயிருப்பு, ஸ்ரீவில்லிபுத்துார், சிவகாசி, சாத்துார், விருதுநகர் மற்றும் மதுரை மாவட்டம் பேரையூர் என 6 தாலுகாக்களில் 900 சதுர கிலோ மீட்டர் வடிகால்களை கொண்டுள்ளது.வைப்பாறு நதியின் 13 கிளை ஆறுகளில் அர்ஜுனா நதி முக்கியமானது. மகாபாரத காலத்தில் பஞ்சபாண்டவர்களின் ஒருவரான அர்ஜுனரால் இந்த நதி உருவாக்கப்பட்டது என புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. அர்ஜுனா நதியில் பிளவக்கல் பெரியாறு, கோவிலாறு, ஆனைக்குட்டம், கோல்வார்பட்டி ஆகிய நான்கு அணைகள் உள்ளது.மேலும் சிறிய, பெரிய 169 கண்மாய், குளங்கள் பாசன வசதி பெறுகிறது.அர்ஜுனா நதி மூலம் மதுரை, விருதுநகர் மாவட்டத்தில் 12 ஆயிரத்து 950 எக்டேர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இதில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 11 ஆயிரத்து 186 எக்டேர் நிலங்களில் 5627 எக்டேர் விவசாய நிலங்களில் மட்டுமே பயிர் சாகுபடி நடக்கிறது. 50 சதவீதம் விவசாய நிலங்கள் சாகுபடி நடக்காமல் தரிசு நிலங்களாக உள்ளன. இந்நிலையில் அர்ஜுனா நதி பல ஆண்டுகளாக துார்வாரப்படாததால் மண்மேவி, ஆக்கிரமிப்பு காரணமாக குறுகியுள்ளது. அதிலும் சீமைக்கருவேல மரங்கள்,அதிகமான கோரைப்புற்கள் வளர்ந்து நீரோட்டம் தடைபடுவதால் நீர் பாசனம் தடைபடுகிறது. குப்பையும் கொட்டுகின்றனர். அர்ஜுனா நதி, அதன் கிளை ஆறுகள், ஓடைகள் ஆகியவற்றை முழுமையாக சீரமைத்து துார்வார தமிழ்நாடு நீர்ப்பாசன வேளாண்மை நவீனமயமாக்கல், நீர்நிலைகள் மறுசீரமைப்பு, மேலாண்மை அமைப்பு சார்பில் 2007 - 08 நிதியாண்டில் உலக வங்கி நிதி உதவியுடன் ரூ.455 கோடிக்கு அர்ஜுனா நதி புனரமைப்பு பணிகளை மேற்கொள்ள திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டது.அத்திட்டம் முழுமையாக செயல்படுத்தப்படாததால் அர்ஜுனா நதியை ஆதாரமாக கொண்ட ஆனைக்குட்டம் அணை, பல்வேறு கண்மாய்களுக்கு நீர்வரத்து இன்றி விவசாய சாகுபடி பரப்பு படிப்படியாக குறைந்து விட்டது. அர்ஜுனா நதியை ஆதாரமாகக் கொண்டு விவசாயம்செய்த பலரும் தொழிலையே விட்டு விட்டனர். இதே நிலை நீடித்தால் விவசாயம் முழுமையாக பாதிக்கப்படும் என விவசாயிகள் கவலையில் உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை