தாலுகா அலுவலகத்தில் பாழாகும் வாகனங்கள்
ராஜபாளையம் : ராஜபாளையம் தாலுகா அலுவலகத்தில் பல்வேறு வழக்குகளில் கைப்பற்றப்பட்டுள்ள வாகனங்கள் திறந்த வெளியில் மழையிலும், வெயிலிலும் சேதமாகி வருகிறது. ராஜபாளையம் நகர் பகுதியில் வடக்கு தெற்கு போலீஸ் ஸ்டேஷன்கள் அமைந்துள்ளன. வடக்கே போலீஸ் ஸ்டேஷனில் சுற்றிலும் இட வசதியுடன் இருந்த நிலையில் வழக்கில் சிக்கிய வாகனங்கள், சட்ட நடவடிக்கைகளில் கைப்பற்றப்பட்ட விசாரணையில் உள்ள வாகனங்கள், குற்றச் செயல்கள் (மது, மணல் திருட்டு) போக்குவரத்து விதி மீறல்கள் போன்ற பல்வேறு காரணங்களால் போலீஸ் அல்லது நீதிமன்றங்களில் வழக்கு விசாரணைக்காக வைக்கப்படுகின்றன. இந்நிலையில் வடக்கு போலீஸ் ஸ்டேஷனில் இட பற்றாக்குறை ஏற்பட்டதால் தாலுகா அலுவலகத்தில் உள்ள திறந்த வெளியில் கடந்த மாதம் கொண்டு வந்து சேர்க்கப்பட்டது. ஏற்கனவே திறந்த வெளியாக உள்ளதால் மலையிலும் வெயிலிலும் வாகனங்கள் சேதமாகி வருகிறது. வழக்கு விசாரணை நடைபெறும் காலங்களில் வாகனங்கள் போலீஸ் ஸ்டேஷனில் அல்லது நீதிமன்றங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட வேண்டும். விசாரணைக்கு பிறகு ஏலத்தில் விடப்பட வேண்டும். உபயோகமில்லாத நிலையை அடைவதை கருதி தகுந்த பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.