நீர்நிலைகளில் செப்டிக் டேங்க் கழிவு நீரை விட்டவர்களை தடுத்து நிறுத்திய கிராமத்தினர்
காரியாபட்டி: காரியாபட்டி மந்திரிஓடையில் ஊருணி, கண்மாய்க்கு செல்லும் நீர் வரத்துக் கால்வாயில் செப்டிக் டேங்க் கழிவு நீரை திறந்து விட்டவர்களை கிராமத்தினர் தடுத்து நிறுத்தி, எச்சரித்து அனுப்பினர். காரியாபட்டி பகுதியில் செப்டிக் டேங்க் கழிவு நீரை வாகனங்களில் எடுத்து ரோட்டோரம், நீர்நிலைகள், வரத்து கால்வாய் உள்ளிட்ட இடங்களில் திறந்து விடுகின்றனர். அப்பகுதியை கடந்து செல்லும்போது துர்நாற்றம் வீசுவதால் முகம் சுளித்து செல்கின்றனர். இந்நிலையில் மதுரை தூத்துக்குடி நான்கு வழிச் சாலை மந்திரி ஓடை அருகே பாலத்தில் கழிவு நீரை திறந்து விடுகின்றனர். குளம் போல் தேங்கி துர்நாற்றம் வீசுவதால் அப்பகுதியை கடந்து செல்ல முடியவில்லை. மழை நேரங்களில் மழை நீரில் கலந்து நீர் நிலைகளுக்கு செல்வதால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளதால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். அதேபோல் அய்யனார் கோயில் ஓடை, அம்மன் கோயில் ஊருணி உள்ளிட்ட இடங்களிலும் கழிவு நீரை திறந்து விடுகின்றனர். மந்திரிஓடை கிராமத்திற்கு குடிநீர் சப்ளை செய்ய கோயில் ஊருணியில் 2 ஆழ்துளை கிணறு அமைத்து தண்ணீர் எடுக்கப்படுகிறது. இதில் செப்டிக் டேங்க் கழிவு நீர் கலப்பதால் ஏராளமானவர்க்கு உடல் உபாதை ஏற்படுகிறது என அதிகாரிகளிடத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது. இதற்கு செப்டிக் டேங்க் கழிவு நீர் தான் காரணம் என்பதை கண்டறிந்த பின், சம்பந்தப்பட்ட சுத்தம் செய்யும் தொழிலாளர்களிடத்தில் கழிவு நீரை திறந்து விட வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டது. அதையும் பொருட்படுத்தாமல் நேற்று அப்பகுதியில் கழிவு நீரை திறந்து விடும்போது கிராமத்தினர் தடுத்து நிறுத்தினர். இனி இது போல் நடந்து கொண்டால் போலீசில் புகார் கொடுத்து கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்படும் என எச்சரித்து அனுப்பினர்.