விருதுநகர் அரசு மருத்துவமனை ரோட்டில் கழிவு நீர் தேக்கம்
விருதுநகர் : விருதுநகர் அரசு மருத்துவமனை ரோட்டில் கழிவு நீர் தேங்கி துர்நாற்றம் வீசுவதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.விருதுநகர் அரசு மருத்துவமனை வளாகம் அருகே உள்ள ரோடு ஓரத்தில் கழிவு நீர் தேங்கி நிற்கிறது. இதனால் பஸ்களில் இறங்கி மருத்துவமனைக்கு செல்லும் நோயாளிகள், அவர்களை பார்க்க செல்லும் உறவினர்கள், நண்பர்கள் துர்நாற்றத்தை கடந்து செல்ல வேண்டிய நிலைக்கு ஆளாகியுள்ளனர். மருத்துவமனை பார்க்க வருபவர்கள் நோயாளிகளாக மாறும் நிலை ஏற்பட்டுள்ளது.இப்பகுதி பெரும்பாலும் பள்ளங்களால் நிறைந்து உள்ளதால் இந்த பிரச்னை நீண்ட நாள்களாக நீடித்து வருவதால் அருகே உள்ள பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர். இதன் அருகே உள்ள பள்ளத்தில் மழை நீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மருத்துவமனை பணியாளர்கள், ஆட்டோர் ஓட்டுநர்கள் பாதிக்கப்படும் நிலை உண்டாகியுள்ளது.எனவே மருத்துவமனை ரோட்டில் மழை, கழிவு நீர் தேங்கும் இடத்தை சீரமைத்து இனி எப்போதும் தேங்காதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும்.