காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்த ஊரக குழுவிடம் எழுத்துப்பூர்வ புகார் விழிப்புணர்வு ஏற்படுத்துமா வனத்துறை
விருதுநகர்: தமிழக அரசு வெளியிட்ட காட்டுப்பன்றியை சுடும் அரசாணையை நிறைவேற்ற தற்போது ஊரக அளவில் வி.ஏ.ஓ., வனவர் உள்ளடக்கிய குழுக்களை நியமித்துஉள்ளது. இதில் பன்றி பாதிப்பு குறித்து எழுப்பூர்வ புகார் அளிக்க விவசாயிகள் யாரும் முன் வருவதில்லை என குற்றச்சாட்டு உள்ள நிலையில், குழு, அதன் செயல்பாடு, தொடர்பு விவரம் பற்றிய விழிப்புணர்வை விவசாயிகள் மத்தியில் அதிகரிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துஉள்ளது.தமிழகத்தில் காட்டுப்பன்றி தொல்லை பெரும் அச்சுறுத்தலாக இருந்து வருகிறது. 2025 ஜன. மாதம் நடந்த சட்டசபை கூட்டத்தில், காட்டுப்பன்றிகள் காப்பு காடுகளில் இருந்து 3 கி.மீ., தொலைவை தாண்டி வந்தால் வனத்துறையினர் சுடலாம் என அரசு அறிவித்தது.இந்நிலையில் இந்த அரசாணையின் வழிகாட்டுதலில் ஒரு விதியாக வனவர், வி.ஏ.ஓ., ஊராட்சி மக்கள் பிரதிநிதி ஆகியவை கொண்டு முதற்கட்ட குழுக்களை கிராமங்கள் தோறும், அடுத்தகட்டமாக வட்டார குழுக்கள், மாவட்ட குழு நியமிக்க வேண்டும். கடந்த மாதம் வரை நியமிக்கப்படாமல் இருந்தது. தற்போது தான் நியமிக்கப்பட்டுள்ளது. இக்குழுவின் விவரம் விவசாயிகள் மத்தியில் சென்றடையவில்லை.இந்நிலையில் வி.ஏ.ஓ., வனவர் உள்ளடக்கிய ஊரகக் குழுக்களிடம் விவசாயிகள் புகார் அளிக்க முன்வரவில்லை என வனத்துறை அதிகாரிகள் குற்றம்சாட்டுகின்றனர். ஆனால் விவசாயிகள் தரப்பில் கூறும் போது, குழு, அதன் விவரம், அலைபேசி எண் பற்றி தாலுகா அலுவலகங்களில் ஒட்ட வேண்டும். அதை விடுத்து விவசாயிகள் எழுத்துப்பூர்வமாக முன்வரவில்லை என்பது கண்துடைப்பு, என்கின்றனர் விவசாயிகள். விருதுநகர் மாவட்டத்தில் ஜூலையில் மட்டும்திருச்சுழி குல்லம்பட்டியில் விவசாயி காளிமுத்து விளைநிலத்தை காட்டுப்பன்றி சேதப்படுத்தியதால்தற்கொலை செய்து கொண்டார். அதே போல் ராஜபாளையம் வடகரை ஊராட்சி நரிக்குளத்தில் காட்டுப்பன்றி தாக்கியதில் விவசாயி ஒருவர் படுகாயமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.