சென்னை:அரக்கோணம் அருகே சித்தேரியில், கடந்த 13ம் தேதி, நடந்த ரயில் விபத்து, சிக்னல் கோளாறு காரணமாக நடந்திருக்கலாம் என, விசாரணையில் தெரிய வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.விபத்து நடந்ததும், சம்பவ இடத்தை பார்வையிட்ட ரயில்வே அமைச்சர் தினேஷ் திவேதி மற்றும் அதிகாரிகள், விபத்திற்கு, டிரைவரின் கவனக் குறைவே காரணம் என தெரிவித்தனர். டிரைவர், மொபைல் போனில் பேசியதாலேயே விபத்து நடந்ததாகவும், தகவல்கள் வெளியாகின. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த டிரைவர் ராஜ்குமார், தான் மொபைல் போனில் பேசவில்லை என்றும், சிக்னல் சரியாக இருந்ததால், வேகமாக ரயிலை இயக்கியதாகவும் கூறினார்.விபத்து குறித்து, பாதுகாப்பு ஆணையர் மிட்டல், கடந்த 17, 18ம் தேதிகளில் விசாரணை நடத்தினார். சிக்னல்களையும், அவற்றை இயக்கிய ஊழியர்களிடமும் விசாரணை நடத்தி, அதற்கான ஆவணங்களையும் பெற்றார். விபத்து நடந்த இடத்திற்கு முன்பாக உள்ள மூன்று சிக்னல்களில், அவற்றின் முதல் இரண்டு சிக்னல்களும் மஞ்சள் விளக்கும், மூன்றாவது சிக்னலில் பச்சை விளக்கும் எரிந்ததாக, விசாரணையில் தெரிய வந்ததாக, ரயில்வே அதிகாரி ஒருவர் கூறினார்.எனவே, விபத்திற்கு காரணம் சிக்னல் கோளாறாக இருக்கலாம் என, ரயில்வே அதிகாரிகள் கருதுகின்றனர்.விசாரணை முடிந்த நிலையில், இன்னும் ஓரிரு நாளில் விசாரணை அறிக்கையை, மத்திய ரயில்வே அமைச்சகத்திடம் சமர்ப்பிக்க உள்ளார்.சித்தேரியில், கடந்த 13ம் தேதி, காட்பாடி பாசஞ்சர் ரயில் மீது, சென்னை கடற்கரையிலிருந்து வேலூர் சென்ற மின்சார ரயில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், 10 பேர் பலியாகினர்; 86 பேர் பலத்த காயமடைந்தனர்.