விபத்தில் பலி: ரூ.8 லட்சம் நஷ்டஈடு
மதுரை:விபத்தில் பலியான இன்ஜினியரிங் கல்லூரி மாணவர் குடும்பத்திற்கு ரூ.7.92 லட்சம் நஷ்டஈடு வழங்க, மதுரை விரைவு கோர்ட் உத்தரவிட்டது.அருப்புக்கோட்டை ராஜீவ் நகரைச் சேர்ந்தவர் குருசாமி,47, மகன் மூர்த்தி,27. இவர் மதுரையில் கூடல்புதூரில் தங்கி ராஜா இன்ஜினியரிங் கல்லூரியில் பி.இ.,இறுதியாண்டு படித்தார். 2010ல் கூடல்நகர் பாலத்தின் ஓரம் நின்று மூர்த்தி, நண்பர் சீனிவாசனுடன் பேசினார். அப்போது டிப்பர் லாரி மோதியதில் மூர்த்தி பலியானார்.அவரது குடும்பத்தினர் நஷ்டஈடு கோரி, டிப்பர் லாரி இன்சூரன்ஸ் செய்யப்பட்ட சிம்மக்கல் ஓரியண்டல் இன்சூரன்ஸ் நிறுவனம் மீது விரைவுக் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். அவர்களுக்கு இன்சூரன்ஸ் நிறுவனம், ரூ.7.92 லட்சம் நஷ்டஈடு வழங்க நீதிபதி பொன்.பிரகாஷ் உத்தரவிட்டார்.