சென்னை:தி.மு.க., நிர்வாகியாக இருந்த ஜாபர் சாதிக், 36, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கு போதை பொருள் கடத்தி, 2,000 கோடி ரூபாய் சம்பாதித்த வழக்கில், டில்லியில் மார்ச் மாதம் மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.சட்ட விரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டது தொடர்பாக, அவரை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்து, சென்னை புழல் சிறையில் அடைத்துள்ளனர்.தொடர் விசாரணையில், ஜாபர் சாதிக்குடன் இணைந்து அவரின் மனைவி அமீனா பானு, 32, சகோதரர் முகமது சலீம், 34 ஆகியோரும் சட்ட விரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. அவர்கள் முன்ஜாமின் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அது, தள்ளுபடி செய்யப்பட்டதால் தலைமறைவாகினர். அவர்களில், முகமது சலீமை, அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.அல்லி முன், நேற்று காலை அவர் ஆஜர்படுத்தப்பட்டார்.அப்போது, அமலாக்கத்துறை தரப்பில் சிறப்பு வழக்கறிஞர் என்.ரமேஷ் ஆஜராகி, ''போதைப்பொருள் கடத்தல் வாயிலாக கிடைத்த கோடிக்கணக்கான பணத்தை, போலி நிறுவனங்கள் துவக்கி, சகோதரர்கள் இருவரும் முதலீடு செய்துள்ளனர்.''சட்ட விரோத பணத்தில் அசையாச் சொத்துகளை வாங்கியுள்ளனர். அதற்கான ஆதாரங்கள் உள்ளன, சட்ட விரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதற்கான ஆவணங்களும் கைப்பற்றப்பட்டு உள்ளன,'' என்றார்.முகமது சலீம் தரப்பில் வழக்கறிஞர் கே.எம்.காளிசரண் ஆஜராகி, ''விசாரணைக்கு ஆஜராகி முழு ஒத்துழைப்பு அளித்த நிலையில், மனுதாரரை கைது செய்தது தேவையற்றது,'' என்றார்.இதையடுத்து, முகமது சலீமை, வரும் 27ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க, நீதிபதி உத்தரவிட்டார். அவரை 15 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி, அமலாக்கத்துறை தரப்பில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதற்கு பதிலளிக்கும்படி, முகமது சலீம் தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை இன்று தள்ளிவைத்தார்.