கறுப்பு "பேட்ஜ் அணிந்து நிருபர்கள் போராட்டம்
சேலம்:அரசுத்துறை சார்ந்த தகவல்களையும், மக்கள் பிரச்னை தொடர்பான கூட்டங்களில் பங்கேற்க அனுமதி மறுப்பதையும், அடையாள அட்டை வழங்காமல் இழுத்தடிப்பதை சுட்டிக்காட்டி, சேலம் கலெக்டரிடம் பத்திரிகையாளர்கள் ஆவேசமாக முறையிட்டதால், பரபரப்பு ஏற்பட்டது.சேலம் கலெக்டர் அலுவலகத்தில், அரசு பொருட்காட்சி நிறைவடைந்ததையடுத்து, சிறந்த அரங்குகளுக்கான பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் மகரபூஷணம் தலைமை வகித்தார். விழாவைத் தொடர்ந்து, பத்திரிகையாளர் சந்திப்பு நடந்தது. இரண்டு மாதங்களுக்கு மேலாகியும், அங்கீகாரம் பெற்ற நிருபர்கள், போட்டோகிராபர்களுக்கு அடையாள அட்டை வழங்காமல் இழுத்தடிப்பதாக, மாவட்ட நிர்வாகத்தைக் கண்டித்து, நிருபர்கள் கறுப்பு பேட்ஜ் அணிந்து கூட்டத்தில் பங்கேற்றனர்.மக்கள் பிரச்னை தொடர்பான சாலை பாதுகாப்புக் குழு கூட்டம், விவசாயிகள் குறைதீர் கூட்டம், அனைத்துக் கட்சி கூட்டம் போன்றவற்றில், நிருபர்களை பங்கேற்க அனுமதி மறுப்பது, அமைச்சர் வருகை தொடர்பாக தகவல் அளிக்க மறுப்பது, அங்கீகாரம் பெற்ற நிருபர்களுக்கு அடையாள அட்டை வழங்காமல் இழுத்தடிப்பது, உள்ளாட்சி தேர்தல் குறித்த செய்திகளை தர மறுப்பது போன்ற குற்றச்சாட்டுகளை, நிருபர்கள் பலரும் கலெக்டரிடம் சுட்டிக் காட்டினர்.கலெக்டர் கூறியதாவது: மாதாந்திர கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்படும். சில தகவல்களை சொல்வதற்கு எனக்கு அதிகாரம் இல்லை. அடையாள அட்டை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். போலி நிருபர்கள் மீது நடவடிக்கை எடுக்க, போலீசாருக்கு உத்தரவிடப்படும். கேபிள், 'டிவி' பிரச்னை குறித்து அதற்கான கார்ப்பரேஷன் தலைவர் தான் கூற வேண்டும், உள்ளாட்சி தேர்தல் தொடர்பான தகவல்களை முன்னதாக தெரிவிக்க வேண்டாம் என, மாநில தேர்தல் கமிஷன் கூறியுள்ளது. நிருபர்களின் பிரச்னைகளுக்கு முன்னுரிமை கொடுக்கிறேன். பத்திரிகையாளர் கூட்டம், பிரச்னையாக மாறிவிடக் கூடாது.இவ்வாறு கலெக்டர் கூறினார்.