5000 ஆண்டு கற்கோடாரி ஆய்வில் கண்டெடுப்பு
விக்கிரவாண்டி:விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அடுத்த முட்டத்துார் கிராமத்தில், பழமையான பானை ஓடுகள் இருப்பது குறித்து வரலாற்று ஆய்வாளர் செங்குட்டுவனுக்கு தகவல் கிடைத்தது. அதன்படி, அவர் நேற்று முன்தினம் அங்கு சென்று ஆய்வு செய்தபோது, பழமையான கற்கோடாரி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.செங்குட்டுவன் கூறுகையில், “இக்கருவி 5000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. வேட்டை கால மக்கள் வேளாண் சமூகத்துக்கு மாறியபோது இதுபோன்ற கற்கோடரிகளை பயன்படுத்தியுள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் கீழ்வாலை, உடையாநத்தம், தி.தேவனுார், பாக்கம் மலைப்பகுதிகளில் கற்கால மனிதர்கள் வாழ்ந்ததற்கான தடயங்கள் ஏற்கனவே கண்டறியப்பட்ட நிலையில், தற்போது இங்கும் அதற்கான தடயம் கிடைத்துள்ளது. இப்பகுதியில் தமிழக அரசின் தொல்லியல் துறை அகழாய்வு நடத்தினால், மேலும் பல தடயங்கள் கிடைக்கும்,” என்றார்.