கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூரில் தி.மு.க., சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில், தி.மு.க., அமைப்பு செயலர் பாரதி பேசியதாவது: கடந்த 1960களில் ஹிந்தியை விருப்ப மொழியாக வைத்து, ஒரு மொழியில் தோல்வியுற்றால் கூட எல்லா பாடத்தையும் திரும்ப எழுதும் நிலை இருந்தது. தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்ற பின் தான், இந்நிலை மாற்றப்பட்டு, இருமொழிக் கொள்கை கொண்டு வரப்பட்டது.அண்ணாமலை வெள்ளாளக் கவுண்டர் இனத்தைச் சேர்ந்தவர். கவுண்டர் இனத்தோர், உயர்ஜாதி பிரிவில் இருந்தனர். இட ஒதுக்கீடு மூலம் பலர் உயர்கல்வி பெற்று மருத்துவர், பொறியாளர்கள் ஆனதும், தங்களையும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவுக்கு மாற்றுங்கள் என அந்த சமுதாயத்தினர், முன்னாள் முதல்வர் கருணாநிதியிடம் முறையிட்டனர்; பின், அதை பெற்றனர். கருணாநிதியால் பெறப்பட்ட இட ஒதுக்கீட்டில், இரு மொழிக் கொள்கையில் படித்தவர் அண்ணாமலை. அவரும், சினிமாக்கார பொறுக்கிகளும் தி.மு.க.,வை விமர்சிக்கக்கூடாது. தமிழக முதல்வர் ஸ்டாலின் இங்கு அமர்ந்து கொண்டே, தவறாக பேசிய மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானை மன்னிப்பு கோர வைத்துள்ளார். தற்போது, இரு நாட்கள் லோக்சபாவை, தமிழ் மொழிக்காக தி.மு.க., முடக்கி உள்ளது. உலகில் மிகப்பெரிய பதவியை பெற்ற சுந்தர் பிச்சை கூட, இருமொழிக் கல்வியை கற்றவர் என்பதும், அதை உருவாக்கியது, தி.மு.க., என்பதையும் யாரும் மறுக்கக்கூடாது. இவ்வாறு அவர் பேசினார்.
தினமலரை மறக்காத பாரதி
தி.மு.க., மாநில அமைப்பு செயலர் ஆர்.எஸ்.பாரதி எங்கு பேசினாலும், 'தினமலர்' நாளிதழை விமர்சித்து பேசுவது வழக்கம். நேற்றும் அவர், ''இங்கு பேசிய சிலர், முதல் நிதியமைச்சர் சி.சுப்ரமணியம் என்றனர். அது தவறு. முதன் முதலில் நிதியமைச்சராக இருந்தவர், திராவிட பள்ளியில் படித்த ஆர்.கே.சண்முகம் செட்டியார். இதை ஏன் சொல்கிறேன் என்றால், இதைத்தான், தினமலர் கட்டம் கட்டுவான். இவர்கள் பேசியதற்கு, ஆர்.எஸ்.பாரதியும் தலையாட்டினார் என போடுவான்; அதற்காக சொல்கிறேன்,'' என்றார்.