சென்னை: ரவுடிகளுடன் கூட்டு சேர்ந்து, நில அபகரிப்பில் ஈடுபட முயன்றவர்களுக்கு, சாதகமாக செயல்பட்ட குற்றச்சாட்டில் சிக்கியுள்ள இன்ஸ்பெக்டர் ஆனந்த்பாபு வீடு உட்பட நான்கு இடங்களில், சி.பி.ஐ., அதிகாரிகள் சோதனை நடத்தினர்.சென்னை சோழிங்கநல்லுாரைச் சேர்ந்தவர் கார்த்திக். இவருக்கு, அதே பகுதியில், 18.25 சென்ட் நிலம் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலத்தை, அதே பகுதியை சேர்ந்த கோபாலகிருஷ்ணன், சரவணன், தேவன், சீனிவாசன் உள்ளிட்டோர், போலி ஆவணங்கள் வாயிலாக அபகரிக்க முயற்சி செய்துள்ளனர்.இதுகுறித்து, ஆலந்துார் நீதிமன்றத்திலும், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசிலும் வழக்கு விசாரணையில் உள்ளது. பிரச்னைக்குரிய இடத்திற்கு பட்டா வழங்கக் கூடாது என, கார்த்திக், நீலாங்கரை சார் - பதிவாளர் அலுவலகம் மற்றும் சோழிங்கநல்லுார் தாசில்தார் அலுவலகத்திலும் புகார் அளித்துள்ளார்.இந்நிலையில், நடப்பாண்டு மே 14ல், கோபாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் பிரச்னைக்குரிய அந்த இடத்திற்கு சென்றுள்ளனர். அவர்களுடன், 20 ரவுடிகள் இருந்ததாகவும் கூறப்படுகிறது. அவர்கள் சுற்றுச்சுவரை இடித்துள்ளனர். அவர்களுடன் கூட்டு சேர்ந்து, நீலாங்கரை இன்ஸ்பெக்டராக இருந்த ஆனந்த்பாபு, 10 போலீசாருடன் சென்று பாதுகாப்பு அளித்தாகவும் கூறப்படுகிறது.நில அபகரிப்பை தடுக்க முயன்ற கார்த்திக் மற்றும் அவரது பெற்றோரை ஆபாசமாக வார்த்தைகளில் திட்டியதுடன், 'இந்த இடத்தை விட்டு ஓடிவிடுங்கள். பிரச்னை செய்தால் உங்கள் மீது வழக்குப்பதிவு செய்வேன்' என, மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.இதுகுறித்து, சென்னை சி.பி.ஐ., அலுவலகத்தில், கார்த்திக் புகார் அளித்துள்ளார். சென்னை உயர் நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்துள்ளார். இதை விசாரித்த நீதிமன்றம், ஆனந்த் பாபு உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்க உத்தரவிட்டது. இதையடுத்து, உதவி கமிஷனர் தலைமையிலான சி.பி.ஐ., அதிகாரிகள், ஆனந்த்பாபு, கோபாலகிருஷ்ணன் உட்பட, ஆறு பேர் மீது வழக்கு பதிந்துள்ளனர்.அதன் அடிப்படையில், சென்னை அண்ணா நகர் காவலர் குடியிருப்பில் உள்ள, ஆனந்த்பாபு வீடு மற்றும் இந்த நில அபகரிப்புக்கு உடந்தையாக இருந்த, பெசன்ட் நகரில் உள்ள பெண் வங்கி அதிகாரியின் வீடு உட்பட, நான்கு இடங்களில் நேற்று சோதனையில் ஈடுபட்டனர். ஆனந்த் பாபு தற்போது நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில், சட்டம் - ஒழுங்கு இனஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார்.