உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கோவில்களில் ஆடல் பாடல் நிகழ்ச்சி: நிபந்தனையுடன் ஐகோர்ட் அனுமதி

கோவில்களில் ஆடல் பாடல் நிகழ்ச்சி: நிபந்தனையுடன் ஐகோர்ட் அனுமதி

சென்னை: கடலுார் மாவட்டத்தில் உள்ள இரண்டு கோவில்களில், ஆடல், பாடல் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி அளித்து உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்றம், 'நிகழ்ச்சிகளில் மாணவர்களின் மனதை கெடுக்கும் விதமான ஆபாச நடனங்கள், இரட்டை அர்த்த வசனங்கள் இடம் பெறக்கூடாது' என, தெரிவித்துள்ளது.

சட்டம் - ஒழுங்கு

கடலுார் மாவட்டம், சோனாங்குப்பத்தைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் தாக்கல் செய்த மனு:எங்கள் கிராமத்தில் மிகவும் பழமையான வெங்கடேச பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவில் திருவிழாவை முன்னிட்டு, ஒவ்வொரு ஆண்டும் ஆடல், பாடல் நிகழ்ச்சியானது, எந்த ஒரு சட்டம் - -ஒழுங்கு பிரச்னையும் இல்லாமல் நடத்தப்படுகிறது.வரும், 11ம் தேதி மாலை, 6:00 முதல் இரவு, 11:00 மணி வரை, ஆடல்- பாடல் நிகழ்ச்சி நடத்த அனுமதி கோரிய மனுவை, எந்திரத்தனமாக பரிசீலித்து, கடலுார் துறைமுகம் போலீசார் நிராகரித்துள்ளனர்.அதை ரத்து செய்து, ஆடல் பாடல் நிகழ்ச்சி நடத்த அனுமதிக்கும்படி உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.இதேபோல, கடலுார் அகரம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ நல்ல கூந்தல் அழகிய அம்மன் கோவில் திருவிழாவில், ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி கோரி, கணேசமூர்த்தி என்பவரும் வழக்கு தொடர்ந்தார்.இம்மனுக்கள், நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன் விசாரணைக்கு வந்தன. போலீஸ் தரப்பில் அரசு வழக்கறிஞர் கே.எம்.டி.முகிலன் ஆஜராகி, ''சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்பதால், இந்நிகழ்ச்சி களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது,'' என்றார்.மனுதாரர்கள் தரப்பில் வழக்கறிஞர் ஏ.சதீஷ் குமார் ஆஜராகி, ''எவ்வித சட்டம் - ஒழுங்கு பிரச்னையும் நடக்காமல், இதுவரை நிகழ்ச்சிகளை நடத்தி வந்துள்ளோம்.வேண்டுமென்றே, போலீசார் சட்டம் ஒழுங்கு பிரச்னையை காரணம் காட்டி அனுமதி மறுத்து உள்ளனர்,'' என்றார்.

நடவடிக்கை

இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி பிறப்பித்த உத்தரவு:உயர் நீதிமன்ற இரண்டு நீதிபதிகள் அமர்வு, இவ்விவகாரத்தில் 2018ம் ஆண்டே விரிவான தீர்ப்பை வழங்கியுள்ளது. அந்த தீர்ப்பின்படி, அனுமதி மறுத்த போலீசாரின் உத்தரவுகளை ரத்து செய்கிறேன்.கோவில்களில் நடக்கும் ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு போலீசார் அனுமதி வழங்க வேண்டும். போலீஸ் பாதுகாப்புக்காக, மனுதாரர்கள் தலா, 10,000 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும்.ஆடல் பாடல் நிகழ்ச்சிகளில், மாணவர்களின் மனதை கெடுக்கும் விதமான ஆபாச நடனங்கள், ஆபாச மற்றும் இரட்டை அர்த்தங்கள் உடைய வசனங்கள் இடம் பெறக்கூடாது.குறிப்பாக, ஜாதி, மதம் மற்றும் அரசியல் தொடர்பான நடனமோ, பாடலோ, பேனர்களோ இருக்கக்கூடாது. ஜாதி, மத வேற்றுமை இல்லாமல், அமைதியான முறையில் நிகழ்ச்சி நடத்த வேண்டும்.இந்த நிபந்தனைகளை மீறினால், சட்டப்படியான நடவடிக்கையை உடனே போலீசார் எடுக்க வேண்டும்.அனுமதிக்கப்பட்ட நேரத்தை கடந்து, நிகழ்ச்சியை நடத்த அனுமதிக்கக் கூடாது. இது தவிர போலீசார் விரும்பினால், மேலும் சில நிபந்தனைகளை விதிக்கலாம்.இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Kasimani Baskaran
மார் 09, 2025 11:00

கோவில்களில் பாரம்பரிய நடனம், பாட்டு போன்றவை நவராத்திரி மற்றும் சிவராத்திரி நேரங்களில் நடப்பது புதிதல்ல. ஆனால் அதை நீதிமன்றமும், காவல்துறையும் முடிவு செய்ய அவர்களுக்கு எந்த உரிமையும் இல்லை. மத வழிபாடு அரசியலமைப்பு சட்டம் கொடுக்கும் அடிப்படை உரிமை.


Dharmavaan
மார் 09, 2025 08:16

தீர்ப்பு எப்போதுமே விசத்திரமாக உள்ளது .போலீஸ் மேலும் கண்டிஷன் போடலாம் என்பது


Appa V
மார் 09, 2025 03:25

எல்லா வழிபாட்டு தலங்களிலும் அனுமதிக்கலாமே


சுந்தர்
மார் 09, 2025 01:53

சினிமாக்களில் கூட ஜாதி மதம் பற்றி புண்படுத்தும் விதமாக எடுத்தால், சென்சார் சான்றிதழ் கொடுத்தால், சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட வேண்டும் என்றும் தீர்ப்பு வேண்டும் கனம் நீதிபதி அவர்களே.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை