சென்னை:கடலுார் மாவட்டம் வடலுாரில், வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கும் பணியை நிறுத்தி வைக்கும்படி அறிவுறுத்த உள்ளதாக, தமிழக அரசு தரப்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இவ்வழக்கின் விசாரணையை, வரும் 10க்கு உயர் நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது.கடலுார் மாவட்டம் வடலுாரில், திறந்தவெளி இடமாக உள்ள பெருவெளியில் இருந்து ஜோதி தரிசனத்தை லட்சக்கணக்கான பக்தர்கள் காண்பர். இந்த இடத்தில், 100 கோடி ரூபாய் செலவில், வள்ளலார் சர்வதேச மையம் கட்டுவதற்கான நிர்வாக ஒப்புதலை, கடந்த ஆண்டு அக்டோபரில் வழங்கி அரசாணை பிறப்பிக்கப்பட்டது.'சர்வதேச மையத்தை, அரசு நிலத்தில் கட்டலாம். சத்திய ஞானசபை, சத்திய தர்மசாலை அருகில் உள்ள பெருவெளியில் கட்டக் கூடாது' என, தமிழக அரசுக்கு உத்தரவிடக்கோரி, தமிழக பா.ஜ.,வின் ஆன்மிக மற்றும் கோவில் மேம்பாட்டு பிரிவின் மாநில செயலர் வினோத் ராகவேந்திரன் என்பவர், மனுத்தாக்கல் செய்தார். பெருவெளியில் சர்வதேச மையம் கட்ட தடை கோரி, தமிழ்வேங்கை என்பவரும் மனுத்தாக்கல் செய்தார்.மனுக்கள், நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஆதிகேசவலு அடங்கிய சிறப்பு அமர்வில், நேற்று விசாரணைக்கு வந்தன. மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 'பெருவெளியில் எந்த கட்டுமானமும் மேற்கொள்ள வள்ளலாரே விரும்பவில்லை. அந்த இடத்தை அப்படியே வைத்திருக்கவே விரும்பினார். மேலும், 150 ஆண்டு புராதன பகுதியாக உள்ளதால், அதற்கான ஆணையத்தின் அனுமதி பெறப்படவில்லை. மத்திய தொல்லியல் துறை அதிகாரிகள் குழு தான் ஆய்வு மேற்கொள்ள வேண்டும்' என்றார்.அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன், அறநிலையத் துறை தரப்பில், சிறப்பு பிளீடர் அருண் நடராஜன் ஆஜராகினர். 'சர்வதேச மையம் 100 கோடி ரூபாய் செலவில் அமைகிறது. தியான மண்டபம், டிஜிட்டல் நுாலகம், தங்குமிடம் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்த உள்ளோம். சர்வதேச மையத்தை கட்டி, அவர்களிடம் ஒப்படைத்து விடுவோம். தொல்லியல் துறை ஆய்வு நடப்பதால், ஒரு பகுதியில் கட்டுமானம் நிறுத்தப்பட்டுள்ளது. மற்றொரு பகுதியில் கட்டுமானம் மேற்கொள்ளப்படுகிறது' என, அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.இதையடுத்து, 'தொல்லியல் குழு அறிக்கை அளிக்க, மூன்று, நான்கு வாரங்கள் ஆகலாம் என்பதால், அதுவரை ஏன் காத்திருக்கக் கூடாது' என, நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும், 'நாங்கள் எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை; விசாரணையை, வரும் 10ம் தேதி வைத்துக் கொள்ளலாம். அதுவரை பணிகளை நிறுத்தி வைக்கலாமே' என்று நீதிபதிகள் கூறினர். அதற்கு, அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன், இதுகுறித்து அதிகாரிகளுக்கு அறிவுறுத்துவதாக தெரிவித்தார்.இதற்கிடையில், வடலுார் தலைமை சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் சார்பில், வழக்கறிஞர் எம்.புருேஷாத்தமன் ஆஜராகி, ''வள்ளலார் கூறிய பெருவெளி என்பது வேறு; வடலுார் பெருவெளியில் உள்ள 110 ஏக்கரில், 30 ஏக்கருக்கும் மேல் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. அதை பாதுகாக்க வேண்டும். அரசு சார்பில் 100 கோடி ரூபாய் செலவில் சர்வதேச மையம் கட்டுவதற்கு தடை விதிக்கக் கூடாது. எங்கள் தரப்பையும் கேட்க வேண்டும்,'' என்றார்.வழக்கு விசாரணையை, வரும் 10க்கு, நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.