மாதாவை மட்டும் மாணவர்கள் சுமக்கலாமா ஹிந்து தமிழர் கட்சி கேள்வி
சென்னை:'வேளாங்கண்ணி மாதாவை தோளில் சுமந்து, கல்லுாரி முழுக்க சுற்றிவர வைத்த, தொழில்நுட்பக் கல்லுாரி மீது அரசு நடவடிக்கை எடுக்குமா' என, ஹிந்து தமிழர் கட்சி தலைவர் ராம.ரவிக்குமார் கேள்வி எழுப்பி உள்ளார்.அவரது அறிக்கை:கடலுார் மாவட்டம், பண்ருட்டி அடுத்த செட்டிப்பாளையம் கிராமத்தில், அன்னை வேளாங்கண்ணி தொழில்நுட்பக் கல்லுாரி உள்ளது. இக்கல்லுாரியில், நேற்று முன்தினம் கல்லுாரிக்கு படிக்க வந்த மாணவ - மாணவியர் மற்றும் அங்கு பணிபுரியும் ஆசிரியர்களை வைத்து, வேளாங்கண்ணி மாதாவை தோளில் சுமந்து, கல்லுாரி முழுக்க சுற்றிவர வைத்துள்ளனர்; இது எந்த வகையில் நியாயம்?பள்ளிகளில் மதம் சார்ந்த எந்த கருத்துகளும் பேசக்கூடாது என, அமைச்சர் மகேஷ் கூறுகிறார். விநாயகர் சதுர்த்தி விழா பள்ளிகளில் கொண்டாடக்கூடாது. ஆனால், அன்னை வேளாங்கண்ணியை துாக்கி சுமப்பது நியாயமா? இது மறைமுகமான மதமாற்றத்திற்கு வழி வகுக்காதா? இந்த கல்லுாரி நிர்வாகத்தின் மீது தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது?கல்வி காவிமயமாகி விடக்கூடாது என கருத்து தெரிவிப்போர், வேளாங்கண்ணி தெய்வத்தை துாக்கி சுமக்கும், தொழில்நுட்பக் கல்லுாரி குறித்து என்ன கருத்து சொல்லப் போகின்றனர் என பார்ப்போம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.