உங்கள் பாதம் தொட்டு கேட்டு கொள்கிறேன் ஒற்றுமையுடன் செயல்படுங்கள்: முனுசாமி
கிருஷ்ணகிரி:''தொண்டர்களே, உங்கள் பாதம் தொட்டு கேட்டுக் கொள்கிறேன், ஒற்றுமையுடன் செயல்படுங்கள்,'' என, அ.தி.மு.க., துணை பொதுச்செயலர் முனுசாமி பேசினார்.கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட, அ.தி.மு.க., அலுவலகத்தில், உறுப்பினர் அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. அ.தி.மு.க., துணை பொதுச்செயலரும், வேப்பனஹள்ளி எம்.எல்.ஏ.,வுமான முனுசாமி, கட்சியினருக்கு அடையாள அட்டைகளை வழங்கி பேசியதாவது: எம்.ஜி.ஆரை தொடர்ந்து, அ.தி.மு.க.,வை காப்பாற்றி வழி நடத்தியவர் ஜெயலலிதா. அவர் வழியில் பொதுச்செயலர் பழனிசாமி, கட்சியை காப்பாற்றி வருகிறார். அ.தி.மு.க., ஒரு குடும்பம் போன்றது. கட்சி தொண்டர்களால் தான், அதன் தலைமைக்கு மரியாதை. தற்போது, கட்சி சோதனையில் உள்ளது. அதை காப்பாற்ற, ஒவ்வொரு தொண்டனும் பாடுபட வேண்டும். நம்மை பற்றி தெரியாமல், பலர் விமர்சிக்கின்றனர். அவர்களுக்கு தெரிய வைக்கவாவது, நாம் ஒன்றுமையுடன் செயல்பட வேண்டும். கடந்த, 50 ஆண்டுகளாக எந்த பதவியிலும் இல்லையென்றாலும், கரை வேட்டி கட்டிக்கொண்டு, என் கட்சிதான் பெரியது என்பவர் தான் அ.தி.மு.க., தொண்டர். அதனால், தொண்டர்களின் பாதம் தொட்டு கேட்டுக் கொள்கிறேன், நாம் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட்டால், வரும், 2026ல் பழனிசாமியை முதல்வராக்கலாம். உங்களோடு நான் இருக்கிறேன்; எங்களோடு நீங்கள் இருங்கள். இவ்வாறு அவர் பேசினார்.