உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நிலச்சரிவு அபாய பகுதி வரைபடம் வெளியிட வேண்டும் கட்டுமான துறை வல்லுனர்கள் வலியுறுத்தல்

நிலச்சரிவு அபாய பகுதி வரைபடம் வெளியிட வேண்டும் கட்டுமான துறை வல்லுனர்கள் வலியுறுத்தல்

சென்னை:நிலச்சரிவு அபாயம் குறித்த விபரங்கள் அடங்கிய, 'கான்டூர் மேப்' எனப்படும், நிலத்தின் உயர வரைபடங்களை வெளியிட்டால், பாதுகாப்பு இல்லாத இடங்களில் கட்டடங்களை தவிர்க்கலாம் என, கட்டுமான துறை வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து, கட்டட அமைப்பியல் பொறியாளர் பி.பாலமுருகன் கூறியதாவது: நீலகிரி மற்றும் சில மலைப்பகுதிகளில், மழைக் காலத்தில் நிலச்சரிவு அபாயம் அதிகம் இருப்பதாக தொடர்ந்து கூறப்படுகிறது. இங்குள்ள மண் அடுக்குகளின் தன்மை அடிப்படையில், ஆய்வாளர்கள் இந்த கருத்தை தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர்.நிலச்சரிவு போன்ற பேரிடர்களை தவிர்க்க முடி யாது என்றாலும், அதில், மனிதர்களுக்கும், சொத்துக் களுக்கும் ஏற்படும் பாதிப்பை குறைக்கலாம். பொதுவாக மலைப்பகுதிகளில் நிலத்தின் சாய்வு தளம் எப்படி அமைந்துள்ளது என்று பார்த்து, அதன் அடிப்படையில் தான் கட்டடங்கள் கட்ட அனுமதிக்க வேண்டும். இதற்காக புவியியல் துறை வாயிலாக, 'கான்டூர் மேப்' எனப்படும், நிலத்தின் உயர வரைபடங்கள் தயாரிக்கப்படுகின்றன. மாவட்டம், தாலுகா, கிராம அளவில் இந்த வரைபடங்கள் தயாரிக்கப்படுகின்றன. இதில், நிலத்தின் சாய்வு தளம், 45 டிகிரி வரை இருந்தால், அங்கு கட்டடம் கட்ட அனுமதிக்கலாம். இதற்கு மேல், சாய்வு தளம், கோணம் அதிகரிக்கும் போது அங்கு கட்டடங்கள் கட்டுவது நல்லதல்ல. அதை மீறி கட்டடங்கள் கட்டினால், நிலச்சரிவு, நிலநடுக்கம், மழை வெள்ளம் போன்ற பாதிப்புகளில் சேதம் அதிகமாகும். இந்த வரைபடங்களை அரசு வெளியிட்டால், பொது மக்களும், கட்டுமான நிறுவனங்களும், திட்ட அனுமதி வழங்கும் துறைகளும் கருத்தில் கொண்டு செயல்பட வாய்ப்பு ஏற்படும். குறிப்பாக, செங்குத்தான மலைப்பகுதிகளில் விதிகளை மீறி கட்டடங்கள் கட்டப்படுவதை, ஆரம்பத்திலேயே தடுக்க இது உதவும். எனவே, இந்த வரைபடங்களை மக்கள் பார்வைக்கு வெளியிட, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

அறிகுறிகள் என்ன?

நிலச்சரிவுக்கான அறிகுறிகள் விபரம்:  கட்டடங்களில் திடீர் விரிசல்; பழைய விரிசல்கள் மேலும் விரிவடைதல்  மலைகள், மலைச் சரிவுகளில் திடீரென புதிதாக நீரூற்றுகள் ஏற்படுதல் மரங்கள், மின்சாரம் மற்றும் தொலைத்தொடர்பு கம்பங்களில் வழக்கத்துக்கு மாறான அசைவுகள் ஏற்படுதல் ஏரி, குளம், கிணறு போன்றவற்றில் நீர்மட்டம் திடீரென அதிகரித்தல், கலங்கல் ஏற்படுதல் நீர் கொண்டு செல்லப்படும் குழாய்களில் திடீர் உடைப்புகள் ஏற்படுதல் மழை இல்லாத சமயத்தில், நிலத்தில் திடீரென ஈரப்பதம் அதிகரித்தல் போன்றவை ஏற்பட்டால், அங்கு மிக விரைவில் நிலச்சரிவு ஏற்பட போகிறது என்பதை மக்கள் உணர்ந்து, பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும்.

பாதிப்பில் இருந்து தவிர்ப்பது எப்படி?

மலைப்பகுதிகளில் குடியேறும் மக்கள், குறிப்பிட்ட சில நடவடிக்கைகள் வாயிலாக, நிலச்சரிவு போன்ற பாதிப்புகளை தவிர்க்கலாம். இதுகுறித்து, புவியியல் வல்லுனர்கள் கூறியதாவது: மலைப்பகுதிகளில் அதிக ஆழத்துக்கு வேர் விடும் வகை மரங்களை வளர்க்க வேண்டும் சூழலியல் தாக்க மதிப்பீடு இன்றி கட்டுமானப்பணிகளை மேற்கொள்ளக் கூடாது நீர்வழிப் பாதைகளின் ஓரங்களில், 'கான்கிரீட்' தடுப்புச் சுவர்களை அமைக்க வேண்டும் சாலை ஓரங்கள், கட்டடங்கள் கட்டும் இடங்களைச் சுற்றி தடுப்புச் சுவர்களை அமைக்க வேண்டும் நிலச்சரிவால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து, அங்கு குடியேறும் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை