கடலாமைகளை காக்க நடவடிக்கை 208 மீனவர்கள் மீது வழக்கு அமைச்சர் பொன்முடி தகவல்
சென்னை:சென்னை, கடலுார், நாகப்பட்டினம் மாவட்டங்களில், கடலாமைகள் இறப்பு அதிகரித்த நிலையில், விதிகளை மீறியதாக, 208 மீனவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளதாக, வனத்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார். கடலாமைகள் இறப்பு குறித்து ஆய்வு செய்ய, மீன்வளத்துறை, வனத்துறை, கடலோர காவல் படை, தன்னார்வ அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்ற கூட்டம், தலைமை செயலகத்தில் நேற்று நடந்தது. பின், அமைச்சர் பொன்முடி கூறியதாவது: கடலாமைகள் முட்டையிடும் காலத்தில், கடற்கரையில் இருந்து, 9 கி.மீ., தொலைவு வரை விசைப்படகுகளில் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.இதற்கு மீனவர்கள் முழுமையாக ஒத்துழைத்தால் தான் கடலாமைகளை பாதுகாக்க முடியும். நடப்பு ஆண்டில் இதுவரை, சென்னை, கடலுார், நாகப்பட்டினம் மாவட்டங்களில், 1,328 கடலாமைகள் இறந்து கரை ஒதுங்கியுள்ளன. முந்தைய ஆண்டுகளை விட இது அதிகம்.இதில் தடை செய்யப்பட்ட இடங்களில், மீன் பிடிப்பதில் ஈடுபட்டதாக, 208 விசைப்படகு மீனவர்கள் மீது வழக்கு பதிவு செய்து இருக்கிறோம். இவர்களுக்கு வழங்கப்படும் டீசல் மானியத்தையும் ரத்து செய்துள்ளோம். தமிழகத்தில் தற்போதைய நிலவரப்படி, 3,000 விசைப்படகுகள் பயன்பாட்டில் உள்ளன. கடலாமைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து, விசைப்படகு உரிமையாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம். தடை செய்யப்பட்ட இடங்களில் மீன் பிடிக்கின்றனரா என்பதை அறிய, மீன்வளத்துறை வாயிலாக விசைப்படகுகளில் கண்காணிப்பு கருவிகள் அமைக்கப்பட உள்ளன.தற்போது ரோந்து பணிக்கு வாடகை படகுகளே பயன்படுத்தப்படுகின்றன. அதற்கு பதிலாக, சொந்த படகுகளை பயன்படுத்த, வனத்துறை செலவில் வாங்கி, மீன்வளத்துறைக்கு வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.