திருச்செந்துார் கோவிலை சுற்றி கட்டடங்களை அகற்ற உத்தரவு
மதுரை:துாத்துக்குடி மாவட்டம், திருச்செந்துார் கோவிலைச் சுற்றியுள்ள அங்கீகாரமற்ற கட்டடங்களை அளவீடு செய்து அகற்ற, உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.திருச்செந்துார் செந்தில் ராஜேஷ் தாக்கல் செய்த பொதுநல மனு:திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு 1 கி.மீ., சுற்றளவில், 9 மீட்டர் உயரத்திற்குமேல் கட்டுமானங்கள் மேற்கொள்ளக்கூடாது. இது, கடற்கரை மேலாண்மை திட்டம் மற்றும் ஒழுங்குமுறை மண்டல விதி. விதிகளை மீறி கட்டப்பட்டுள்ள கட்டடங்களை அகற்ற தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.அந்த மனுவை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார், நீதிபதி முகமது ஷபீக் அமர்வு: அங்கீகாரமற்ற கட்டடங்களை அகற்ற நகராட்சி நிர்வாகம் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. துாத்துக்குடி கலெக்டர் தலைமையிலான உயர்நிலை கண்காணிப்புக்குழு ஒவ்வொரு மாதமும் கூட்டம் நடத்தி, திருச்செந்துார் நகராட்சி பகுதியில் அனுமதியற்ற கட்டடங்களை அகற்ற மேற்கொண்ட நடவடிக்கையை கண்காணிக்க வேண்டும்.கட்டடங்களின் உண்மையான உயரத்தை அளவீடு செய்வதற்கு, 'ட்ரோன்'களை பயன்படுத்துவதற்கு, சம்பந்தப்பட்ட துறையின் உதவியை நகராட்சி நிர்வாகம் பெறலாம்.இவ்வாறு உத்தரவிட்டனர்.