சென்னை: 'தமிழக மீனவர்களை மொட்டையடித்து அவமதித்த இலங்கை அரசை, இந்தியா கடுமையாக கண்டிப்பதுடன், பன்னாட்டு சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
அவரது அறிக்கை:
ராமேஸ்வரத்தில் இருந்து மீன் பிடிக்க சென்ற எட்டு மீனவர்களை, ஆகஸ்ட் 27ல் இலங்கை கடற்படை கைது செய்தது. மூவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. ஐந்து பேர் தலா 50,000 ரூபாய் அபராதத்துடன் விடுவிக்கப்பட்டனர். அவர்கள் குறித்த காலத்திற்குள் அபராதம் செலுத்தவில்லை எனக்கூறி, மொட்டை அடித்து, கை விலங்கிட்டு சிறை கழிப்பறைகளையும், கழிவுநீர் கால்வாய்களையும் சுத்தம் செய்ய வைத்து, சிங்கள அரசு கொடுமைப்படுத்தி உள்ளது.இந்த மனித தன்மையற்ற செயல் கடுமையாக கண்டிக்கத்தக்கது; இதை மன்னிக்க முடியாது. காலக்கெடுவுக்குள் அபராதம் செலுத்தாவிட்டால், அதை நீதிமன்றத்தின் பார்வைக்கு எடுத்துச் சென்று, நீதிமன்ற உத்தரவுப்படி, இலங்கை அரசு செயல்பட்டிருக்க வேண்டும். மாறாக, மீனவர்களுக்கு மொட்டையடித்து, கழிப்பறைகளை சுத்தம் செய்யும் தண்டனையை வழங்கும் அதிகாரத்தை, இலங்கை அரசுக்கு எந்த பன்னாட்டு அமைப்பு வழங்கியது.இது, இந்தியாவின் இறையாண்மைக்கு நிகழ்த்தப்பட்ட அவமதிப்பாகும். இதை மத்திய, மாநில அரசு வேடிக்கை பார்ப்பது கண்டிக்கத்தக்கது. இலங்கையில் தமிழக மீனவர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளை தடுக்க, தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மத்திய அரசுக்கு கடிதம் எழுதுவதுடன், ஸ்டாலின் கடமையை முடித்துக் கொள்கிறார்.தமிழக மீனவர்களை அவமதித்த இலங்கை அரசை, இந்தியா கடுமையாக கண்டிப்பதுடன், பன்னாட்டு சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த சிக்கலிலும், மத்திய அரசுக்கு முதல்வர் கடிதம் எழுதுவதுடன் நிறுத்திக் கொள்ளாமல், அமைச்சர்கள் குழுவை அனுப்பி பிரதமரை சந்திக்க வைத்து, இலங்கை அரசு மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.