அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியை சந்தித்த பா.ம.க., கவுரவ தலைவர் ஜி.கே.மணி, அன்புமணிக்கு மீண்டும் ராஜ்யசபா எம்.பி., வழங்குவது குறித்து பேசிய தகவல் வெளியாகியுள்ளது.கடந்த 2019 லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணியில் பா.ம.க., போட்டியிட்டது. வெற்றியோ, தோல்வியோ தேர்தலுக்குப் பின், அன்புமணிக்கு ராஜ்யசபா சீட் வழங்க வேண்டும் என, பா.ம.க.,வின் கோரிக்கையை ஏற்று, தேர்தலில் கூட்டணி தோற்ற பின்பும், ஏற்கனவே அளித்த வாக்குறுதிபடி, அன்புமணிக்கு ராஜ்யசபா எம்.பி., பதவியை, அ.தி.மு.க., வழங்கியது. ஆனால், கடந்த 2024 லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க.,வை கைகழுவி விட்டு, எதிராக கூட்டணி அமைத்து போட்டியிட்ட பா.ஜ.,வுடன் கூட்டணி அமைத்தது பா.ம.க., https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=hf5gp1ze&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்த தேர்தலிலும் பா.ம.க., போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் தோல்வி அடைந்தது. பா.ம.க., தலைவர் அன்புமணியின் ராஜ்யசபா எம்.பி., பதவி, வரும் ஜூலை 24ல் முடிகிறது. இம்முறை அ.தி.மு.க., ஆதரவு இருந்தால் மட்டுமே, அவரால் மீண்டும் எம்.பி.,யாக முடியும். இந்நிலையில், கடந்த 17ம் தேதி சேலத்தில், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியை, ஜி.கே.மணி சந்தித்துப் பேசினார். உறவினர் இல்லத் திருமணத்திற்கு அழைப்பிதழ் கொடுக்க சந்தித்தாக கூறப்பட்டது. ஆனால், மகனை மீண்டும் எம்.பி.,யாக்க, ராமதாஸ் அனுப்பிய துாதராகவே, ஜி.கே.மணி பழனிசாமியை சந்தித்தார் என பா.ம.க., தரப்பில் கூறுகின்றனர். ஜி.கே.மணியிடம் மனம் விட்டு பேசிய பழனிசாமி, 'கடந்த லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணிக்கு வந்திருந்தால் குறைந்தபட்சம் தர்மபுரியில் பா.ம.க.,வும், கள்ளக்குறிச்சியில் அ.தி.மு.க.,வும் வென்றிருக்கும். விழுப்புரம், சிதம்பரத்திலும் வென்றிருக்கலாம். இரு கட்சிகளுக்கும் ஓட்டு சதவீதமும் அதிகரித்திருக்கும். 2019 போலவே இப்போது, அன்புமணிக்கு ராஜ்யசபா எம்.பி., பதவி கொடுத்திருப்போம்' என தெரிவித்துள்ளார்.பழனிசாமியின் கருத்தை ஆமோதித்த ஜி.கே.மணி, 'முடிந்ததை பற்றி பேசி பலனில்லை. வரும் சட்டசபை தேர்தலில் சேலம் உள்ளிட்ட வடக்கு, மேற்கு பகுதிகளில் பா.ம.க.,வின் ஆதரவு அ.தி.மு.க.,வுக்கு மிகுந்த பலன் கொடுக்கும். எனவே, அன்புமணிக்கு ராஜ்யசபா எம்.பி., பதவி கொடுத்தால், அ.தி.மு.க., - பா.ம.க., கூட்டணி இப்போதே உறுதி செய்யப்பட்டு விடும்' என தெரிவித்துள்ளார். பிடி கொடுக்காத பழனிசாமி, 'அ.தி.மு.க.,வுக்கு இரண்டு ராஜ்யசபா இடங்கள் மட்டுமே கிடைக்கக் கூடிய சூழ்நிலையில், ஏற்கனவே அளித்த வாக்குறுதிபடி, தே.மு.தி.க.,வுக்கு ஒரு சீட் ஒதுக்க வேண்டியிருக்கும். மிகப் பெரிய இயக்கமான அ.தி.மு.க., தரப்பில் ஒரு சீட்டுக்காவது போட்டியிட வேண்டிய நிர்ப்பந்தம் கட்சிக்கு உள்ளது. கட்சி சார்பில், நிறைய பேர் ராஜ்யசபா சீட் எதிர்பார்க்கும் நிலையில், கிடைக்கப் போகும் ஓரிடத்தையும் பா.ம.க.,வுக்கு விட்டுக் கொடுத்தால், கட்சிக்குள் வீண் குழப்பம் ஏற்படும். அதோடு, கட்சிக்கென லோக்சபாவில் எம்.பி.,க்களே இல்லாத நிலையில், ராஜ்யசாபாவுக்கு செல்லும் வாய்ப்பையும் பறிகொடுக்க கட்சியினர் விரும்பமாட்டார்கள். அதனால், இப்போதைக்கு வாய்ப்பில்லை; ஸாரி' என்று சொல்லியுள்ளார். இருந்தபோதும், பழனிசாமியை ஜி.கே.மணி சந்தித்தபின், பா.ம.க.,வின் செயல்பாடுகளில் மாற்றங்கள் தென்படத் துவங்கியுள்ளன. ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை வலியுறுத்தி, நேற்று முன்தினம் சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய அன்புமணி, 'ஜெயலலிதா இல்லாவிட்டால், 69 சதவீத இடஒதுக்கீடு கிடைத்திருக்காது' என புகழ்ந்துரைத்து பேசினார். இது அ.தி.மு.க.,வினரை சந்தோஷப்பட வைத்திருக்கிறது. -- நமது நிருபர் -