ஸ்ரீவி., வனப்பகுதியில் மான் வேட்டை; துப்பாக்கி பறிமுதல் மூவரிடம் வனத்துறை விசாரணை
ஸ்ரீவில்லிபுத்துார்: விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துார் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் துப்பாக்கியுடன் மான் வேட்டையில் ஈடுபட்ட மூன்று பேர் கொண்ட கும்பலை பிடித்த வனத்துறையினர் அவர்களிடமிருந்து 2 மான் கொம்புகள், ஒரு துப்பாக்கியை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.நேற்று முன்தினம் இரவு ஸ்ரீவில்லிபுத்தூர் வனப்பகுதியான மம்சாபுரம் மேற்கு தொடர்ச்சி மலையடிவார தோப்பு பகுதியில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.அப்பகுதியில் சந்தேகத்திற்கு இடமளிப்பதாக நடமாடிக் கொண்டிருந்த மூவர் கும்பலை பிடித்து வனத்துறையினர் விசாரித்தனர். அப்போது அவர்களிடமிருந்து 2 மான் கொம்புகள், ஒரு துப்பாக்கியை பறிமுதல் செய்தனர். ஸ்ரீவில்லிபுத்தூர் வனத்துறை அலுவலகத்தில் அவர்களிடம் வனத்துறையினர் தொடர்ந்து விசாரிக்கின்றனர். இதுகுறித்து மம்சாபுரம் போலீசாரும், கியூ பிராஞ்ச் போலீசாரும் அவர்களிடம் விசாரித்து வருகின்றனர்.