| ADDED : ஏப் 27, 2024 12:48 AM
சென்னை:எழுதப் படிக்க தெரியாத, 15 வயதுக்கு மேற்பட்டோர் விபரங்களை சேகரிக்கும் பணிகளை, ஒரு வாரத்தில் துவங்க, முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.இதுகுறித்து, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி பிரிவு இயக்குனர் நாகராஜ முருகன் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தின் கீழ், தமிழகத்தில் எழுத, படிக்க தெரியாத, 15 வயதுக்கு மேற்பட்டவர்களை கண்டறியும் கணக்கெடுப்பு பணி, மாவட்ட வாரியாக மேற்கொள்ளப்பட வேண்டும்.மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள், தங்கள் மாவட்டத்தில், கிராம அளவில் எழுத, படிக்க தெரியாதவர்கள் குறித்த விபரங்களை சேகரிக்கும் பணிகளை, மே முதல் வாரத்தில் துவங்க வேண்டும்.இதற்கு பள்ளி, கல்லுாரி நாட்டு நலப்பணித் திட்டம் போன்ற, கல்வி சாரா இணை அமைப்புகளில் பங்கேற்றுள்ள மாணவர்களை பயன்படுத்தி கொள்ளலாம்.மேலும், 100 நாள் வேலை திட்டப் பணியாளர்கள், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள், தன்னார்வலர்கள் மற்றும் ஆசிரியர்களையும், இந்த கணக்கெடுப்பில் பங்கேற்க வைக்கலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.