மேலும் செய்திகள்
பச்சமலையில் மண்சரிவு
14-Dec-2024
ரேஷன் கடையில் பொருட்கள் சேதம்
04-Dec-2024
திருச்சி : திருச்சி மாவட்டம், துறையூர் அருகே உள்ள பச்சமலை மலைப்பகுதியில், திருச்சி மண்டல தலைமை வனப்பாதுகாவலர் பெரியசாமி அறிவுறுத்தல்படி, வன அலுவலர் சரவணன் தலைமையில், வண்ணத்துப் பூச்சி கணக்கெடுப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. தி நேச்சர் அண்ட் பட்டர்பிளை சொசைட்டியான டி.என்.பி.எஸ்., அமைப்பில் உள்ள கோயம்புத்துார், சேலம், சென்னையை சேர்ந்த உறுப்பினர்கள், மாவட்ட வனத்துறையினருடன் இணைந்து கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டனர். செங்காட்டுப்பட்டி விரிவாக்க வனப்பகுதி, காளியம்மன் கோவில் திட்டு காப்புக்காடு, சுற்றுச்சூழல் பூங்கா பகுதி மங்களம் அருவி உட்பட பச்சமலையின் உலர் மற்றும் ஈரத்தன்மை கொண்ட இலையுதிர் காடுகளில் கணக்கெடுப்பு பணி நடந்தது. இரண்டு நாட்கள் நடந்த கணக்கெடுப்பு ஆய்வில், நீல அழகி, மயில் அழகி, மஞ்சள் அழகி, கண்ணாடி வரியன், நாடோடி கருப்பு, ஆரஞ்சு வரியன், சாம்பல் மின்னி, வெண்கருப்பு சிறகன், இரட்டை வால் சிறகன், அந்திச்சிறகன், வயல் துள்ளி போன்ற வண்ணத்துப் பூச்சி இனங்கள் பரவலாக காணப்பட்டன. பச்சமலை வனப்பகுதியில், 2016 மற்றும் 2022ம் ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில், 105 மற்றும் 109 வண்ணத்துப் பூச்சி இனங்கள் கண்டறிப்பட்டன.தற்போது, ஸ்வாலோ டெயில்ஸ், ஒயிட் மற்றும் யெல்லோஸ், பிரஷ்-ஃபுட் வண்ணத்துப் பூச்சிகள், ப்ளூஸ், மெட்டல் மார்க்ஸ் மற்றும் ஸ்கிப்பர்ஸ் ஆகிய ஆறு குடும்பங்களைச் சேந்த 126 வண்ணத்துப் பூச்சி இனங்கள் கண்டறியப்பட்டு உள்ளன. கிழக்குத் தொடர்ச்சி மலைகளில் அரிதாக காணப்படும் நீல நிறக் குடும்பத்தைச் சேர்ந்த ரச்சனா ஜலிந்திரா வண்ணத்துப் பூச்சியும், இந்த ஆய்வில் கண்றியப்பட்டது. பச்சமலையில் பல்வேறு வகையான வண்ணத்துப் பூச்சி இனங்கள் சீராக அதிகரித்து வருவதால், தொடர்ந்து ஆய்வு நடத்தினால், 175 வகையான வண்ணத்துப் பூச்சிகளை இனங்கண்டு பதிவு செய்ய முடியும், என்று மாவட்ட வன அலுவலர் கிருத்திகா கூறினார்.
14-Dec-2024
04-Dec-2024