சென்னை: சென்னை புத்தகக்காட்சியை, துணை முதல்வர் உதயநிதி நேற்று துவக்கி வைத்தார். தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர் சங்கமான, 'பபாசி' சார்பில், நந்தனம் ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில், 48வது சென்னை புத்தகக்காட்சி நேற்று துவங்கியது. இது, ஜன., 12ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதை, துணை முதல்வர் உதயநிதி நேற்று மாலை துவக்கி வைத்தார். பள்ளிக்கல்வி துறை அமைச்சர் மகேஷ், தமிழ்நாடு பாடநுால் கழக இயக்குனர் சங்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். புத்தகக்காட்சி நடக்கும் மைதானத்தில், 900 அரங்குகள் உள்ளன. இவற்றில், ஒரு லட்சத்துக்கும் அதிகமான புத்தகங்கள் விற்பனைக்கு வந்துள்ளன. புத்தகக்காட்சி தினமும் பிற்பகல், 2:00 மணி முதல் இரவு 8:30 மணி வரையும், விடுமுறை நாட்களில் காலை, 11:00 முதல் இரவு, 8:30 மணி வரையும் நடக்கும். இங்கு விற்பனைக்கு உள்ள அனைத்து புத்தகங்களுக்கும், 10 சதவீத தள்ளுபடி சலுகை உண்டு. மேலும், பல்வேறு பதிப்பகங்கள், 50 சதவீதம் வரையிலான சலுகையையும் வழங்குகின்றன. புத்தகக்காட்சிக்கு, 10 ரூபாய் நுழைவு கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச அனுமதி.
'தினமலர்' வாசகர்களுக்கு...
சென்னை புத்தகக்காட்சியில், எண் 45 மற்றும் 46ல், 'தினமலர்' அரங்கு உள்ளது. இதில், அந்துமணி எழுதிய நுால்கள், சங்ககால நாணயவியல் அறிஞர் இரா.கிருஷ்ணமூர்த்தி எழுதிய நாணயவியல் குறித்த ஆய்வு நுால்கள், ஆன்மிக மலர், வாரமலர் இணைப்பு இதழ்களில் வெளியான தொடர் கதைகள் மற்றும் கட்டுரைகள், 'தாமரை பிரதர்ஸ் மீடியா' வெளியிட்டுள்ள நுாற்றுக்கணக்கான நுால்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.