தமிழகத்துக்கு சபரிமலையில் 5 ஏக்கர்; கேரளாவுக்கு பழநியில் 5 ஏக்கர்; நிலம் வழங்க இரு மாநிலமும் முடிவு!
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
சென்னை: 'சபரிமலையில், தமிழகத்திற்கு 5 ஏக்கர் நிலம் கேட்டுள்ளோம். அதற்கு பதிலாக, பழனியில் கேரளாவுக்கு 5 ஏக்கர் நிலம் வழங்க உள்ளோம்,'' என, தமிழக ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.சென்னையில், அவர் அளித்த பேட்டி: கண்ணகி கோவில் கட்டவும், கோவிலுக்கு செல்லும் வழிப் பாதையை செப்பனிடவும் அனுமதி அளிக்க வேண்டும் என, கேரள மாநில அரசிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. அய்யப்பன் கோவிலுக்கு செல்லும் பக்தர்களில், 30 சதவீதம் பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களுக்கு வசதி ஏற்படுத்துவதற்காக, சபரி மலையில் 5 ஏக்கர் நிலம் கேட்டுள்ளோம். அவர்கள், பழனியில் இடம் தந்தால் தருவதாகக் கூறினர். பழனியில் இடம் தர தயாராக உள்ளோம் என்று, தெரிவித்துள்ளோம்.அய்யப்பன் கோவில் விழா காலங்களில், தமிழகத்தில் இருந்து செல்வோருக்கு உதவ, சன்னிதானத்தில் சுழற்சி முறையில், இருவரை நியமித்துள்ளோம். அவர்களுக்கு அறை, உணவு வழங்கப்படுகிறது. தொடர்பு வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளோம்.மதுரை மீனாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தை, ஜனவரிக்குள் முடிக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு சேகர்பாபு கூறினார்.