வாசகர்கள் கருத்துகள் ( 1 )
கோவை மாவட்டதுல. இதனால் பயணடைந்தவர் யாரவது இருந்தா சொல்லுங்க
சென்னை:மத்திய அரசால் வழங்கப்பட்ட 245 கால்நடை ஆம்புலன்ஸ்களில், 60 ஆம்புலன்ஸ்கள் பழுதடைந்துள்ளன. அவற்றை சரிசெய்ய நடவடிக்கை எடுக்காததால், வீணாகி வருகின்றன.நோயால் பாதிக்கப்பட்ட, விபத்தில் சிக்கிய கால்நடைகளுக்கு, அவை இருக்கும் இடத்திற்கு சென்று சிகிச்சை அளிப்பதற்காக, 39 கோடி ரூபாய் மதிப்பில், 'லிப்ட்' மற்றும், 'எக்ஸ்ரே' வசதிகளுடன் கூடிய 245 கால்நடை ஆம்புலன்ஸ் வாகனங்களை, மத்திய அரசு தமிழகத்திற்கு வழங்கியது. அவற்றை தொடர்புகொள்ள, '1962' என்ற கட்டணம் இல்லா தொலைபேசி எண்ணும் கொடுக்கப்பட்டது. கடந்த மூன்று மாதங்களாக, 60 ஆம்புலன்ஸ்கள் பழுதடைந்துள்ளன. மற்றவையும் முறையாக இயக்கப்படுவதில்லை என, விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். சேதமடைந்தன
இதுகுறித்து, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் ஈசன் முருகசாமி கூறியதாவது: மத்திய அரசால் வழங்கப்பட்ட 245 ஆம்புலன்ஸ்களுக்கு, தேவையான மருத்துவர்கள், உதவியாளர்கள், ஓட்டுநர்களை, தமிழக அரசு தேர்வு செய்யாமல், நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே இடத்தில் நிறுத்தி வைத்திருந்தது. இதனால், அவை சேதம் அடைந்தன. இதுகுறித்து மக்கள் கேள்வி எழுப்பியதும், தமிழக அரசு அவற்றை செயல்பாட்டிற்கு கொண்டு வந்தது. தற்போது, 185 மட்டுமே இயங்கி வருகின்றன. பழுது காரணமாக பல பகுதிகளில் ஆம்புலன்ஸ்கள் இயக்கப்படாமல் உள்ளன. இது, விவசாயிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்தி உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். இதுகுறித்து, கால்நடை துறை அதிகாரிகள் கூறியதாவது:ஒரு லட்சம் கால்நடைகளுக்கு, ஒரு ஆம்புலன்ஸ் என்ற அடிப்படையில், 245 ஆம்புலன்ஸ்கள் மத்திய அரசால் வழங்கப்பட்டன. அவற்றில், 95 சதவீத ஆம்புலன்ஸ்கள் இயங்கி வருகின்றன. மீதமுள்ளவை, டயர் பஞ்சர் உள்ளிட்ட காரணங்களால் பழுதாகி நிற்கலாம். பழுதுநீக்கி அவற்றை மீண்டும் இயக்க, நடவடிக்கை எடுக்கப்படும். அவகாசம் தேவை
கால்நடை ஆம்புலன்சில் பணிபுரியும் மருத்துவர்கள், உதவியாளர்கள், டிரைவர்கள் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்படுகின்றனர். மருத்துவர்களில் சிலர் மேற்படிப்பு அல்லது அரசு தேர்வுக்கு படிக்கச் செல்வதால், பணியில் இருந்து தங்களை விடுவித்துக் கொள்கின்றனர். வேறு கால்நடை மருத்துவரை நியமிக்க அவகாசம் தேவைப்படுகிறது. அதனால், அவ்வப்போது சில பகுதிகளில் சேவை குறைபாடு இருக்கலாம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
கோவை மாவட்டதுல. இதனால் பயணடைந்தவர் யாரவது இருந்தா சொல்லுங்க