மலை ரயிலை வழிமறித்த ஒற்றை யானையால் பரபரப்பு
குன்னுார்: மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டி நோக்கி வந்த மலை ரயிலை, ஒற்றை யானை வழிமறித்ததால், பரபரப்பு ஏற்பட்டது.நீலகிரி மாவட்டம், குன்னுார் - மேட்டுப்பாளையம் இடையே உள்ள வனப்பகுதிகளில், தற்போது காட்டு யானைகள் நடமாட்டம் உள்ளது. அதில், ஒற்றை யானை, மேட்டுப்பாளையம், குன்னுார் இடையே மரப்பாலம் - வடுக தோட்டம் மலை ரயில் பாதை பகுதியில் முகாமிட்டுள்ளது. மேட்டுப்பாளையத்தில் இருந்து நேற்று காலை 7:10 மணிக்கு ஊட்டிக்கு புறப்பட்ட மலை ரயில், காலை 9:30 மணிக்கு வடுக தோட்டம் பகுதியில் வந்தபோது, யானை வழிமறித்தது. உடனடியாக ரயில் நிறுத்தப்பட்டது. தொடர்ந்து, ஹாரன் எழுப்பி, யானையை விரட்ட ரயில்வே ஊழியர்கள் முயற்சித்தனர். இதில், ரயிலை நோக்கி யானை ஓடி வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.மீண்டும் ஹாரன் சப்தம் எழுப்பியதை அடுத்து, யானை அங்கிருந்து, வனப்பகுதிக்குள் சென்றது. இந்த சம்பவத்தால், ரயிலில் வந்த சுற்றுலா பயணியர் அச்சமடைந்தனர். இதுகுறித்த வீடியோ தற்போது பரவி வருகிறது.