பெண் எஸ்.ஐ.,யை தாக்கிய வி.சி.,யினர் மீது நடவடிக்கை * தினகரன் வலியுறுத்தல்
சென்னை:'சிவகங்கையில் பெண் எஸ்.ஐ.,யை தாக்கிய விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன் வலியுறுத்தியுள்ளார்.அவரது அறிக்கை:சிவகங்கை மாவட்டம், சோமநாதபுரம் காவல் நிலையத்திற்குள், அத்துமீறி நுழைந்த வி.சி.,யை சேர்ந்த சிலர், அங்கிருந்த பெண் எஸ்.ஐ., மீது தாக்குதல் நடத்தியிருப்பதாக வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. இதற்கு, காவல் துறையை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதல்வர் ஸ்டாலின் வெட்கி தலைகுனிய வேண்டும். பொது மக்களுக்கு பாதுகாப்பு வழங்கி வரும் பணியில் ஈடுபட்டுள்ள தன் மகளுக்கு, காவல் நிலையத்திலேயே பாதுகாப்பில்லை எனக் கூறி கதறி அழும் எஸ்.ஐ.,யின் தாய்க்கு, காவல் துறை என்ன பதில் சொல்லப் போகிறது? தன்னை கொலை செய்ய சதித் திட்டம் தீட்டப்பட்டதாக, பெண் போலீஸ் உயரதிகாரி ஒருவர் அளித்த புகார் ஏற்படுத்திய பரபரப்பு அடங்குவதற்குள், காவல் நிலையத்திற்குள் பெண் எஸ்.ஐ.,க்கு நடந்திருக்கும் தாக்குதல், பெண் காவலர்களுக்கு பாதுகாப்பில்லை என்பதையே தெளிவுபடுத்துகிறது. பெண் எஸ்.ஐ.,யை தாக்கிய வி.சி.,யினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். காவல் துறையில் பணியாற்றும் பெண்களின் பாதுகாப்பை, முதல்வர் ஸ்டாலின் உறுதிப்படுத்த வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.