கோவிலுக்குள் நுழைவதை ஜாதி பெயரில் தடுத்தால் நடவடிக்கை: ஐகோர்ட் எச்சரிக்கை
சென்னை:'கோவிலுக்குள் நுழைவதை, ஜாதி அடிப்படையில் எவரேனும் தடுத்தால், அவர்களுக்கு எதிராக காவல்துறை வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.அரியலுார் மாவட்டம், உடையார்பாளையம் தாலுகாவை சேர்ந்த வெங்கடேசன் தாக்கல் செய்த மனு:உடையார்பாளையம் தாலுகா புதுக்குடி கிராமத்தில் அய்யனார் கோவில் உள்ளது. சுதந்திரம் பெற்று, 75 ஆண்டுகள் கடந்து விட்டன. புதுக்குடி அய்யனார் கோவிலில், பட்டியலின மக்கள் வழிபட அனுமதியில்லை. பட்டியலின மக்களால் நிறுவப்பட்ட சிலைகளை, ஒரு பிரிவினர் இடித்து அகற்றி விட்டனர். கோவிலில் அமைக்கப்பட்டுள்ள பெரிய இரும்பு கதவுக்கு பின்னால் இருந்து தான், சுவாமி தரிசனம் செய்ய பட்டியலின மக்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. இக்கோவிலில் ஜூலை 16 முதல், 31ம் தேதி வரை நடக்க உள்ள தேர் திருவிழாவில், பட்டியலின மக்கள் பங்கேற்கவும், கோவிலுக்குள் நுழைய அனுமதிக்கவும் உத்தரவிட வேண்டும். இவ்விவகாரம் தொடர்பாக அளித்த புகார் மனுக்கள் மீது, எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.இவ்வாறு மனுவில் கூறியுள்ளார். இந்த மனுவை விசாரித்த, நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் பிறப்பித்த உத்தரவு:சட்டத்தின் ஆட்சி நடக்கும் நாட்டில், ஜாதி ரீதியான பாகுபாட்டை அனுமதிக்க முடியாது. பல்வேறு தலைவர்களின், நீண்ட போராட்டத்துக்கு பிறகு, கோவில் நுழைவு சட்டம் இயற்றப்பட்டது. இந்த சட்டத்தை அமல்படுத்த வேண்டியது, அதிகாரிகளின் கடமை. எனவே, புதுக்குடி அய்யனார் கோவிலுக்கு பட்டியலின மக்கள் செல்வதை, யாரும் தடுக்கவில்லை என்பதை, அரியலுார் மாவட்ட எஸ்.பி., உறுதி செய்ய வேண்டும். கோவிலில் அனைத்து தரப்பு மக்களும் தரிசனம் செய்வதையும், விழாக்களில் பங்கேற்பதையும், சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்படாதவாறும், எஸ்.பி., மற்றும் ஆர்.டி.ஓ., உறுதி செய்ய வேண்டும்.கோவிலுக்குள் நுழைவதை, ஜாதி அடிப்படையில் எவரேனும் தடுத்தால், அவர்களுக்கு எதிராக, காவல்துறை வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மனு முடித்து வைக்கப்படுகிறது.இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.