உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / உலக நாயகன் பட்டம்: துறந்தார் நடிகர் கமல்

உலக நாயகன் பட்டம்: துறந்தார் நடிகர் கமல்

சென்னை: 'உலக நாயகன்' பட்டத்தை துறந்தார் நடிகர் கமல். 'இனி தன்னை கமல் அல்லது கமல்ஹாசன் என்றே அழைக்க வேண்டும்' என அறிவித்துள்ளார்.

அவரது அறிக்கை:

என் மீது கொண்ட அன்பால், 'உலக நாயகன்' உட்பட பல பிரியம் ததும்பும் பட்டங்களால், என்னை அழைக்கிறீர்கள். மக்கள் கொடுத்து, சக கலைஞர்களாலும், ரசிகர்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட இப்படிப்பட்ட பாராட்டுச் சொற்களால் மகிழ்ந்திருக்கிறேன்; உங்களின் இந்த அன்பால் நெகிழ்ந்தும் இருக்கிறேன். உங்களின் பிரியத்தின் மீது எனக்கு மாறாத நன்றியுணர்வும் உண்டு. சினிமாக் கலை, எந்த ஒரு தனி மனிதனையும் விட பெரியது. அந்த கலையில் மேலும் மேலும் கற்றுக்கொண்டு பரிணாமம் அடைய விரும்பும் ஒரு மாணவன் தான் நான். பிற கலைகளைப் போலவே, சினிமாவும் அனைவருக்குமானது; அனைவராலுமானது. திறமையான கலைஞர்கள், தொழில்நுட்ப வல்லுனர்கள், நல்ல ரசிகர்கள் ஒன்றிணைந்து தான் சினிமா உருவாகிறது. கலையை விடக் கலைஞன் பெரியவன் இல்லை என்பது, என் ஆழமான நம்பிக்கை. கற்றது கைம்மண் அளவு என்பதை உணர்ந்தவனாகவும், தொடர்ச்சியான முன்னகர்வில் நம்பிக்கை கொண்டு உழைத்து உயர்பவனாகவும் இருப்பதே எனக்கு உவப்பானது. அதனால்தான் நிறைய யோசனைக்கு பின், ஒரு முடிவுக்கு வர நேர்ந்தது. மேலே குறிப்பிட்டது போன்ற பட்டங்களையும், அடைமொழிகளையும் வழங்கியவர்களுக்கு, எந்த மரியாதைக் குறைவும் வந்து விடாத வண்ணம் அவற்றைத் துறப்பது என்பதே அது.என் மீது பிரியம் கொண்ட அனைவருக்குமாக, ஒரு வேண்டுகோள் வைக்கிறேன். இனிவரும் காலத்தில், என் ரசிகர்களும், ஊடக நண்பர்களும், திரைத்துறையைச் சார்ந்தவர்களும், கட்சித் தொண்டர்களும், சக இந்தியர்களும், என்னை கமல்ஹாசன் என்றோ, கமல் என்றோ, 'KH' என்றோ குறிப்பிட்டால் போதுமானது. சக மனிதன் என்கிற ஸ்தானத்திலிருந்தும், சினிமாவை நேசிக்கிற நம் அனைவரிலும் ஒருவனாகவே நான் இருக்க வேண்டும் என்ற என் எண்ணத்தில் இருந்தும், இந்த வேண்டுகோள் வெளிப்படுகிறது என்பதைப் புரிந்து கொள்வீர்கள் என நம்புகிறேன்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

'விஜய் மீதான கோபமே காரணம்!'

ம.நீ.ம., நிர்வாகிகள் கூறியதாவது:அமெரிக்காவில் தங்கியிருக்கும் கமல், அங்குள்ள ஹாலிவுட் திரையுலகம் குறித்தும், உச்ச நடிகர்கள் குறித்தும், செயற்கை நுண்ணறிவு குறித்தும் ஆராய்ச்சி படிப்பை மேற்கொண்டு வருகிறார்.திரையுலகில், கடந்த 65 ஆண்டுகளாக அவர் செய்த சாதனைகள், உலக அளவில் பெருமை பெற்றுள்ளன. 'கமல் ஹாலிவுட் சென்றிருந்தால், அவர் தான் நம்பர் 1 நாயகன்; அவர் அங்கு செல்லவில்லை என்றாலும், அவர் தான் உலக நாயகன்' என, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் சமீபத்தில் பாராட்டியுள்ளார்.இந்நிலையில், த.வெ.க., தலைவரும், நடிகருமான விஜய், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்திருந்தார். ஆனால், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவராக இருக்கும் நடிகர் கமலுக்கு, பிறந்த நாள் வாழ்த்து சொல்லவில்லை. தி.மு.க., கூட்டணி கட்சியில் கமல் இருப்பது தான் அதற்கு காரணம் என்றாலும், கலைத் துறையின் பிதாமகனாக கருதப்படுகிற கமலுக்கு, விஜய் வாழ்த்து தெரிவித்திருக்க வேண்டும்.அந்த வருத்தம் கமலுக்கு உண்டு. அதனால் தான், கலைத் துறையில் பெற்ற பட்டமெல்லாம் இனி தேவையில்லை என்ற முடிவை எடுக்க வைத்துள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ