உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கட்டட எப்.எஸ்.ஐ., உயர்வில் புதிய முடிவு கட்டணம் செலுத்தினால் கூடுதல் அனுமதி

கட்டட எப்.எஸ்.ஐ., உயர்வில் புதிய முடிவு கட்டணம் செலுத்தினால் கூடுதல் அனுமதி

சென்னை: கட்டடங்களுக்கான எப்.எஸ்.ஐ., எனப்படும், தளபரப்பு குறியீட்டை ஒட்டுமொத்தமாக உயர்த்தாமல், கட்டணம் செலுத்துவோருக்கு அனுமதி வழங்கும் வகையில், அரசு புதிய முடிவு எடுத்துள்ளது. தமிழகத்தில் நகர், ஊரமைப்பு சட்டப்படி, நிலங்களுக்கான உபயோகம் வரையறுக்கப்பட்டு உள்ளது. ஒரு நிலத்தில் எந்த அளவுக்கு கட்டடம் கட்டலாம் என்பது, தளபரப்பு குறியீடு வாயிலாக கணக்கிடப்படுகிறது. உதாரணமாக, 1,000 சதுர அடி நிலம் இருந்தால், அதில், தரை தளம், முதல் தளம் என்ற அடிப்படையில், 2,000 சதுர அடி அளவுக்கு கட்டடம் கட்டலாம். இது, நிலத்தின் பரப்பளவில், இரண்டு மடங்கு எப்.எஸ்.ஐ., என, குறிப்பிடப்படுகிறது.

இரண்டு மடங்கு

தற்போதைய நிலவரப்படி, தமிழகத்தில் கட்டடங்களுக்கான தளபரப்பு குறியீடு இரண்டு மடங்கு என்ற அளவிலேயே உள்ளது. உயரமான கட்டடங்கள் கட்டும் போது, நிலத்தின் அளவு, சாலை அகலம் அடிப்படையில், அதிகபட்சமாக, 3.25 மடங்கு வரை தளபரப்பு குறியீடு அனுமதிக்கப்படுகிறது. இருப்பினும், உயரமான கட்டடங்கள் கட்டுவதற்கு விரும்பும் நிறுவனங்கள், தளபரப்பு குறியீட்டை உயர்த்த வேண்டும் என, தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. கடந்த ஆண்டு இதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும், சில உயரதிகாரிகளால் இது தடுக்கப்பட்டது. இந்நிலையில், அண்டை மாநிலமான கேரளாவில், தளபரப்பு குறியீடு ஏழு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோன்று, ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களிலும், ஐந்து மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது. கர்நாடகா மாநிலத்தில், 3.25 என்ற அளவில் தளபரப்பு குறியீடு அனுமதிக்கப்படுகிறது. இந்த பின்னணியில், தமிழகத்தில் தளபரப்பு குறியீட்டை உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

முழுமை திட்டம்

இது தொடர்பாக, இந்திய கட்டுமான வல்லுனர்கள் சங்கத்தின் தென்னக மையத்தின் நிர்வாகி எஸ்.ராமபிரபு கூறியதாவது: தமிழகத்தில் தற்போது சாதாரண கட்டடங்களுக்கு இரண்டு மடங்காகவும், உயரடுக்கு கட்டடங்களுக்கு, 3.25 மடங்காகவும் தளபரப்பு குறியீடு அனுமதிக்கப்படுகிறது. இதில், 3.25 மடங்கில், 50 சதவீதம் அளவுக்கு கட்டணம் செலுத்தினா ல், 'பிரீமியம்' எப்.எஸ்.ஐ., அனுமதிக்கப்படுகிறது. மூன்றாவது முழுமை திட்டம் விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், அதில், எப்.எஸ்.ஐ., உயர்த்தப்படும் என எதிர்பார்க்கிறோம். அதற்கு முன், தற்போது, 50 சதவீதமாக உள்ள பிரீமியம் எப்.எஸ்.ஐ., விகிதத்தை உயர்த்தும் பணிகள் நடந்து வருவதாக தெரிகிறது. விரைவில் நல்ல முடிவு அறிவிக்கப்படும் என்று காத்திருக்கிறோம். இவ்வாறு கூறினார். இயல்பான நிலையில், எப்.எஸ்.ஐ., விகிதத்தை உயர்த்தாமல், கட்டணம் செலுத்துவோருக்கு கூடுதல் எப்.எஸ்.ஐ., வழங்கும் நோக்கில், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை