மேலும் செய்திகள்
வெற்றி இலக்கு... கட்சிகள் கணக்கு!
25-Nov-2024
சட்டசபை தேர்தலுக்கு கட்சியினரை முடுக்கி விடும் விதமாக, தி.மு.க., தலைமை செயற்குழு கூட்டம், சென்னை அறிவாலயத்தில் நேற்று முன்தினம் நடந்தது. கூட்டத்தில், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் 36 பேர் பேசினர். அதில் சிலர் வைத்த குற்றச்சாட்டுகள், முதல்வர் ஸ்டாலினை அதிர வைத்தன. குத்தாலம் கல்யாணம் பேசியதாவது:
கட்சியில் ஏராளமான இளைஞர்கள் உள்ளனர்; அவர்களுக்கு சட்டசபை, லோக்சபா தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிப்பதில்லை. கூட்டணி தர்மம்
பெரும்பாலான தொகுதிகள், கூட்டணி கட்சியினருக்கு வழங்கப்பட்டு விடுகின்றன. 234 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என்ற நிலையில், கூட்டணி கட்சியினருக்கு விட்டுக் கொடுக்க வேண்டியதில்லை. கூட்டணி தர்மம் காக்கிறோம் என்ற பெயரில், கூட்டணி கட்சியினர் அதிக எண்ணிக்கையில் 'சீட்' கேட்கின்றனர்; வெற்றி, தோல்வி குறித்து கவலைப்படாமல், 'சீட்'களை பெற்று விடுகின்றனர். 'சீட்' பெற்ற பின்னரே, வேட்பாளர்களை தேடுகின்றனர். அதனால், கூட்டணி கட்சியினர் கேட்கும்போது, தொகுதிகளில் இருக்கும் செல்வாக்கு குறித்து கேட்க வேண்டும். ஒரு தொகுதிக்கு குறைந்தது, ஐந்து வேட்பாளர்கள் பட்டியல் கொடுக்கச் சொல்ல வேண்டும். அதில் இருந்து வெற்றி வேட்பாளரை, நாமே தேர்வு செய்து கொடுக்க வேண்டும். கடந்த லோக்சபா தேர்தலின்போது, மயிலாடுதுறை தொகுதி காங்கிரசுக்கு கொடுக்கப்பட்டது. கடைசி வரை, யார் வேட்பாளர் என்றே தெரியவில்லை. வேறு வழியின்றி, 'கை சின்னத்துக்கு ஓட்டளியுங்கள்' என, பிரசாரம் செய்தோம். வேட்பு மனு தாக்கல் முடியும் நாளில், கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்த சுதாவை வேட்பாளராக்கினர். வேறு வழியின்றி அவருக்கும் பிரசாரம் செய்து வெற்றி பெற வைத்தோம். அதேபோல தான், கடந்த சட்டசபை தேர்தலில் கள்ளக்குறிச்சியில் போட்டியிட நினைத்தோம். அடம் பிடித்து தொகுதியை காங்கிரஸ் வாங்கியது. அங்கும் வெளியூர் நபர் வேட்பாளர் ஆக்கப்பட்டார்; இறுதியில் தோல்வி. இனிமேல் அப்படி நடக்கக்கூடாது. கூட்டணி கட்சி சார்பில் எம்.எல்.ஏ.,க்களாக இருக்கும் சிலர், அரசை தேவையின்றி விமர்சிக்கின்றனர். அவர்களை தலைமை கண்டிக்க வேண்டும். வரும் தேர்தலில், அவர்களுக்கு சீட் கொடுக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசியுள்ளார். திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் வடக்கு ஒன்றிய செயலர் ஜே.மூர்த்தி பேசுகையில், 'ஏற்கனவே அ.தி.மு.க., ஆட்சியில் யாரெல்லாம் அரசு ஒப்பந்தங்கள் எடுத்து சம்பாதித்தனரோ, அவர்களே இப்போதும் ஒப்பந்ததாரர்களாக உள்ளனர். அ.தி.மு.க.,வினருக்கே வாய்ப்பு அளிக்கப்படுகிறது. இதனால், லோக்கல் தி.மு.க.,வினருக்கு மரியாதை இல்லை. அவர்களுக்கே ஒப்பந்தம் அளிக்க வேண்டியிருந்தால், வெளியூரைச் சேர்ந்தோருக்காவது கொடுக்க வேண்டும். அ.தி.மு.க.,வினர் பலரும் அமைச்சர்களிடம் சென்று, எளிதில் காரியம் சாதிக்கின்றனர். ஆனால், தி.மு.க.,காரனால் முடியவில்லை' என புலம்பி உள்ளார். வயதானவர்கள்
நீலகிரி முபாரக் பேசும்போது, 'கட்சியில் பொறுப்பில் இருப்போரில் பெரும்பாலானோர் வயதானவர்களாக உள்ளனர். இளைஞர்களுக்கு வழி விட்டால் தானே, பொறுப்புக்கு வர இயலும்' என்றார். மதுரை ஜெயராமன் பேசும்போது, 'தி.மு.க., ஆட்சியில் கட்சிக்காரன் சொல்லும் எந்த வேலையும் எடுபடுவதில்லை. ஒரு உதவியாளர் பதவிகூட நியமிக்க முடியவில்லை. அதிகாரிகளால் முடிந்தது, கட்சிக்காரனால் முடியவில்லை என்றால், கட்சிக்காரனுக்கு என்ன மரியாதை இருக்கும்' என்று கேட்டார்.
அதற்கு பதிலளித்து முதல்வர் பேசி உள்ளதாவது:
ஒப்பந்ததாரர்களை கட்சி வேறுபாடு பார்த்து, அரசோ, அமைச்சர்களோ தேர்வு செய்வதில்லை. தரமாக பணியாற்றுவரா, அரசு விதிகளின்படி தகுதி உள்ளதா என்பதை பார்த்தே ஒப்பந்தப் பணிகள் அளிக்கப்படுகின்றன. தகுதி மட்டுமே பார்ப்பதால், இப்படியொரு சூழல் இருக்கலாம். கூட்டணியை பற்றி யாரும் கவலைப்பட வேண்டாம்; தலைமை பார்த்துக் கொள்ளும். சீட்களை பிரித்துக் கொடுப்பதும் தலைமையின் வேலைகளில் ஒன்று. 234 தொகுதிகளிலும் தி.மு.க., கூட்டணி வெல்ல வேண்டும். அதை மட்டுமே ஒரே இலக்காக கொண்டு பணியாற்ற வேண்டும். தகுதி இல்லாதவர்களுக்கு கட்சியில் பொறுப்புகள் வழங்குவதில்லை. அதன்படி, இளைஞர்கள் பலரும்கூட பொறுப்புகளுக்கு வந்துள்ளனர். பொறுப்புக்கு வர நினைப்பவர்கள், தகுதியை மட்டுமே வளர்த்துக் கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் பேசியுள்ளார். - நமது நிருபர் -
25-Nov-2024