புதுக்கோட்டை: ''அ.தி.மு.க.,வில் யாரும் கட்சியை விட்டு சென்றுவிடக் கூடாது என்பதற்காகத் தான் முன்கூட்டியே விருப்ப மனு வாங்குகின்றனர்,'' என அமைச்சர் ரகுபதி தெரிவித்தார். புதுக்கோட்டையில், நேற்று அவர் அளித்த பேட்டி: அ.தி.மு.க.,வில் முன்கூட்டியே விருப்ப மனுவை வாங்கி, அவர்கள் கட்சியில், தேர்தலில் நிற்பதற்கு ஆட்கள் இருக்கின்றனரா என பார்க்கின்றனர். மேலும், கட்சியை விட்டு யாரும் சென்றுவிடக் கூடாது என்பதற்காக தான் முன்கூட்டியே விருப்ப மனு வாங்குகின்றனர். இதுதான் அ.தி.மு.க.,வில் விருப்பமனு வாங்குவதற்கு அடிப்படை காரணம். அமித் ஷா, மோடி ஆகியோர், தங்கள் கட்சியின் டிபாசிட்டையாவது காப்பாற்றிக் கொள்ள, தமிழகத்துக்கு இனி படையெடுத்து வரத்தான் வேண்டும். ஆனால், பீஹார் வேறு, தமிழகம் வேறு. தமிழகத்தில் வேறு எந்த இயக்கமும் காலுான்ற முடியாது. ஆரம்ப காலத்தில் இருந்தே திராவிட இயக்கத்தை ஊட்டி வளர்த்த பூமி. ஆன்மிக அரசியலை சொல்லி ஏமாற்ற முடியாது. நாங்கள் ஆன்மிக அரசியலுக்கு எதிரிகள் அல்ல. எல்லாருக்கும் எல்லாம் என்பதுதான் எங்கள் கொள்கை. யாரிடமும் எதிர்ப்பு, வெறுப்பு தெரிவிக்கும் கட்சி தி.மு.க., கிடையாது. தமிழகத்தில் தி.மு.க., அரசு வந்த பின் தான், சுகாதார துறையில் பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அ.தி.மு.க., ஆட்சியில், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தபோது, அந்த துறைக்கு பெயின்ட் மட்டுமே அடித்தார்; வேறு எதுவும் செய்யவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.