உத்தரகண்ட் நிலச்சரிவில் சிக்கிய தமிழர்கள் 30 பேரும் பத்திரம்!
கடலூர்: உத்தரகண்டின் ஆதிகைலாஷ் கோவிலுக்கு சென்ற கடலூரை சேர்ந்த 30 பக்தர்கள், நிலச்சரிவில் சிக்கினர். அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்து உள்ளது.சிதம்பரத்தை சேர்ந்த 30 பேர், ஆதிகைலாஷ் கோவிலுக்கு ஆன்மிக சுற்றுலா சென்றனர். பிறகு அங்கு சாமி தரிசனம் முடித்து விட்டு திரும்பும் வழியில், திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. கோவிலில் இருந்து 18 கி.மீ., தூரத்தில் ஏற்பட்ட இந்த நிலச்சரிவு காரணமாக சாலை மூடப்பட்டு உள்ளது. அவர்கள், அங்குள்ள ஆசிரமம் ஒன்றில் தங்கி உள்ளனர். கடந்த 6 நாட்களாக அவர்கள் அங்கேயே தங்கி உள்ளனர். அவர்களை விரைவாக மீட்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்து உள்ளது. இது குறித்து கடலூர் கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் கூறியதாவது: சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டருடன் பேசி உள்ளேன். 30 பேரும் பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். வானிலையை பொறுத்து, ஹெலிகாப்டர் மூலம் மீட்டு சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பதாக தெரிவித்தார். இவ்வாறு அவர் கூறினார்.