வியக்க வைக்கும் வெம்பக்கோட்டை அகழாய்வு: நட்சத்திர அணிகலன்கள் கண்டடுப்பு
சென்னை: வெம்பக்கோட்டை அகழாய்வில் சுடுமண்ணால் செய்யப்பட்ட நட்சத்திர அணிகலன்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை விஜயகரிசல்குளம் பகுதியில் இரண்டு கட்ட அகழாய்வு பணிகள் முடிந்து 3ம் கட்ட ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த அகழாய்வுப் பணிகளில் பல்வேறு அரிய பொருட்கள் கிடைத்தன. இது, வெம்பக்கோட்டையில் வணிகம் நடந்ததற்கான சான்றாக பார்க்கப்பட்டது.இந்நிலையில், இன்று சுடுமண்ணால் செய்யப்பட்ட நட்சத்திர அணிகலன்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது: ஆச்சர்யங்கள் நிறைந்த பல தொல்பொருள்களை தன்னுள் வைத்திருக்கும் வெம்பக்கோட்டை 3ம் கட்ட அகழாய்வுத் தளத்தில் 1.90 மீட்டர் ஆழத்தில், சுடுமண்ணால் செய்யப்பட்ட நட்சத்திர அணிகலன்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. 1.8 மி.மீ சுற்றளவும், 0. 6 மி.மீ கணமும், 3. 4 கிராம் எடையும் கொண்ட இந்த அணிகலன் அதன் இணையோடு கிடைத்திருப்பது கூடுதல் சிறப்பு. இன்னும் பழந்தமிழர் பொக்கிஷங்கள் பலவற்றை தொல்லியல் துறை வெளிச்சத்திற்கு கொண்டு வரும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.