பெல்ட் ஏரியா பட்டா விதிகளில் திருத்தம் வருமான வரம்பு ரூ.5 லட்சமாக உயர்வு
சென்னை: சென்னையை சுற்றியுள்ள, 'பெல்ட் ஏரியா' எனப்படும் புறநகர் பகுதிகள், பிற மாவட்டங்களில் உள்ள புறம்போக்கு நிலங்களில் வசிப்போருக்கு பட்டா வழங்குவதில், வருமான வரம்பு உள்ளிட்ட விதிகள் திருத்தப்பட்டு உள்ளன. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில், 532 கிராமங்களை சேர்ந்த, 29,187 குடும்பங்கள், பிற மாவட்டங்களில், 57,084 குடும்பங்களுக்கு பட்டா வழங்க, அரசு உத்தரவிட்டது. இதற்கான வழிகாட்டி விதிமுறைகள் கடந்த மாதம் வெளியிடப்பட்டன. அதில், குறிப்பிடப்பட்ட ஆண்டு வருமான வரம்பு உள்ளிட்ட சில விதிகள் தொடர்பாக, பல்வேறு கோரிக்கைகள் வந்ததால், திருத்தம் செய்யப்படும் என்று கூறப்பட்டது. இதுதொடர்பாக, சமீபத்தில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு அடிப்படையில், வருவாய் துறை வெளியிட்டுள்ள அரசாணை: குறிப்பிட்ட சில வகை புறம்போக்கு நிலங்களில், 10 ஆண்டுகளுக்கு மேலாக வசிப்போருக்கு பட்டா வழங்க, ஆண்டு வருமானம், 3 லட்சம் ரூபாயாக இருந்தது. இந்த வரம்பு தற்போது, 5 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுஉள்ளது இதன் அடிப்படையில், நில ஒதுக்கீட்டு வரம்புகளும் திருத்தப்பட்டுள்ளன. அதன்படி, ஆண்டு வருமானம், 5 லட்சம் ரூபாயாக உள்ள குடும்பங்களுக்கு, 3 சென்ட் நிலத்துக்கு பட்டா வழங்கப்படும். அதில், 2 சென்ட் நிலத்திற்கு கட்டணம் எதுவும் இருக்காது; மீதமுள்ள ஒரு சென்ட்டுக்கு நில மதிப்பில், 25 சதவீத தொகையை செலுத்த வேண்டும் ஆண்டு வருமானம், 5 லட்சம் ரூபாய்க்கு மேல், 12 லட்சம் ரூபாய்க்குள் இருக்கும் குடும்பங்கள், 2 சென்ட்டுக்கு நில மதிப்பில், 50 சதவீத தொகையும், ஒரு சென்ட்டுக்கு நில மதிப்பில், 100 சதவீத தொகையையும் செலுத்த வேண்டும் ஆண்டு வருமானம், 12 லட்சம் ரூபாய்க்கு மேல் உள்ள குடும்பங்கள், 3 சென்ட்டுக்கும் நில மதிப்பில், 100 சதவீத தொகையை செலுத்த வேண்டும். நகர்ப்புறம், ஊரகம் இரண்டுக்கும் இந்த விதிமுறை பொருந்தும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.