உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவதில் ஏமாற்று வேலை: அன்புமணி குற்றச்சாட்டு

பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவதில் ஏமாற்று வேலை: அன்புமணி குற்றச்சாட்டு

சென்னை: பழைய ஓய்வூதிய திட்டத்தை திமுக அரசு செயல்படுத்துவதில் ஏமாற்று வேலையை செய்துவருகிறது என்று பாமக தலைவர் அன்புமணி கூறியுள்ளார்.அவரது அறிக்கை:தமிழகத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவதில் திமுக அரசு எத்தகைய ஏமாற்று வேலையை செய்துவிடக் கூடாது என்று அஞ்சிக் கொண்டிருந்தேனோ, அந்த ஏமாற்று வேலையை ககன்தீப் சிங் குழுவை பயன்படுத்தி சாமர்த்தியமாக செய்திருக்கிறது திமுக அரசு. இந்த குழுவை அதன் இறுதி அறிக்கைக்கு பதிலாக இடைக்கால அறிக்கையை தாக்கல் செய்ய வைத்திருப்பதன் மூலம் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்தப் போவதில்லை என்பதை மறைமுகமாக உணர்த்தியுள்ளது.இந்த விவகாரத்தில் திமுகவின் துரோகத்தை பாமக அம்பலப்படுத்தியதாலும், அரசு ஊழியர்கள் தொடர் போராட்டங்களை அறிவித்ததாலும் நிலைமை சமாளிப்பதற்காக பழைய ஓய்வூதியத் திட்டம் குறித்து பரிந்துரைப்பதற்காக ஊரக வளர்ச்சித்துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் ககன்தீப்சிங் பேடி தலைமையில் 3 உறுப்பினர்கள் குழுவை கடந்த பிப்ரவரி 4-ஆம் தேதி அரசு அமைத்தது. இது தொடர்பாக கடந்த ஆட்சியில் ஏற்கனவே குழு அமைக்கப்பட்டு அறிக்கைகள் பெறப்பட்டு விட்ட நிலையில், இப்போது மீண்டும் ஒரு குழுவை அமைப்பது ஏமாற்று வேலை. தமிழகத்தில் எத்தகைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவது என்பது குறித்த முழுமையான அறிக்கையை நேற்று தாக்கல் செய்திருக்க வேண்டிய ககன்தீப்சிங் பேடி குழு இடைக்கால அறிக்கையை மட்டுமே தாக்கல் செய்திருக்கிறது. அதன் விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. இறுதி அறிக்கை எப்போது தாக்கல் செய்யப்படும் என்பது அறிவிக்கப்படவில்லை. இது நிச்சயமாக ஏமாற்று வேலை தான். இதை ஏற்றுக்கொள்ள முடியாது.ககன்தீப்சிங் குழு கடந்த பிப்ரவரி 4-ஆம் தேதியே அமைக்கப்பட்டு விட்ட போதிலும், அடுத்த 6 மாதங்களுக்கு அந்தக் குழு துரும்பைக் கூட அசைக்கவில்லை. இந்த விவகாரத்தில் திமுக அரசின் கருவியாக ககன்தீப்சிங் குழு பயன்படுத்தப்பட்டிருக்கிறது; இது திட்டமிட்ட சதி என்று மீண்டும் ஒருமுறை குற்றஞ்சாட்டுகிறேன். இது அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் இழைக்கப்படும் பெருந்துரோகமாகும்.பாமகவை பொருத்தவரை ககன்தீப்சிங் பேடி குழு அமைக்கப்பட்டதே தேவையற்ற வேலை தான். தமிழகத்தில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவது குறித்து பரிந்துரைக்க 2017ம் ஆண்டு ஆகஸ்ட் 3ம் தேதி மூத்த ஐஏஎஸ் அதிகாரி டி.எஸ்.ஸ்ரீதர் தலைமையில் அமைக்கப்பட்ட குழு 27.11.2018 ஆம் நாள் அதன் அறிக்கையை அன்றைய அரசிடம் தாக்கல் செய்து விட்டது. அதன் அடிப்படையில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்தி இருக்க முடியும். ஆனால், அதை செய்யாமல் புதிய குழுவை திமுக அரசு அமைத்ததன் நோக்கமே அரசு ஊழியர்களை ஏமாற்றுவது தான். அது இப்போது உறுதியாகியிருக்கிறது.இந்தியாவில் ராஜஸ்தான், மேற்கு வங்கம், ஜார்கண்ட், சத்தீஸ்கர், பஞ்சாப், கர்நாடகம், ஹிமாச்சல் ஆகிய 7 மாநிலங்களில் பழைய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்தப் பட்டு வருகிறது. தமிழகத்திலும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த எந்தத் தடையும் கிடையாது.எனவே, ககன்தீப்சிங் பேடி குழு இறுதி அறிக்கையை தாக்கல் செய்யவில்லை என்று காரணங்களைத் தேடிக் கொண்டிருக்காமல் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், போக்குவரத்துத் தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினருக்கும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை திமுக அரசு உடனடியாக செயல்படுத்த வேண்டும்.இவ்வாறு அன்புமணி அறிக்கையில் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

joe
அக் 01, 2025 19:52

உயர் திரு மோடி அவர்கள் நம் நாட்டு அதாவது உள் நட்டு தயாரிய்ப்பு மற்றும் பொருள்களையே வாங்குங்கள் என்கிறார் .சரி அப்படியே பார்த்தாலும் வெளி நட்டு பணம் நம் உள் நாட்டுக்கு வராது .ரொம்ப சந்தோசம் .பணவீக்கம் வராது.okay .பென்ஷன் திட்டம் கொண்டுவருவதால் பண வீக்கம் வருமா ?கண்டிப்பாக வராது .பணப்புழக்கம்தான் வரும் .பண வாட்டம்தான் வரும்.அதனால் ஏழைகளின் வாழ்வும் பாதிக்காது . .நம் நாடு விவசாய நாடு .அதிக மக்கள் தொகை கொண்ட நம் நாட்டை நோக்கியே உலக நாடுகள் பின்பற்றி வருகிறது .அதனால் பழைய ஓய்வூதிய திட்டத்தால் நாட்டுக்கு கெடுதல் வர வாய்ப்பில்லை .வெளி நட்டு பணமே பண வீக்கத்துக்கு காரனம் . உள் நாட்டு தயாரிப்புகளையே பயன்படுத்தினால் வெளி நட்டு பணம் இங்கு வராது பண வீக்கமும் வராது .......பழைய ஓய்வூதிய பென்ஷன் திட்டத்தால் பணவீக்கம் வராது


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை