ஓய்வு அதிகாரிகளை முகவர்களாக நியமித்து நகராட்சி துறையில் வசூல்
சென்னை: அமைச்சர் நேரு துறையில் நடந்த ஊழலில், ஓய்வுபெற்ற அதிகாரிகளை முகவர்களாக நியமித்து, வசூல் வேட்டை நடத்தியது அம்பலமாகி உள்ளது. நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை பணி நியமனத்தில், 1,020 கோடி ரூபாய்க்கு ஊழல் நடந்து இருப்பதாக, அமலாக்கத் துறை புகார் கூறியுள்ளது. இந்த ஊழல் தொடர்பாக, தமிழக தலைமைச் செயலர், பொறுப்பு டி.ஜி.பி., மற்றும் லஞ்ச ஒழிப்பு துறைக்கு, இரண்டு கடிதங்களை அனுப்பி உள்ளனர். அமலாக்கத் துறை அதிகாரிகள் கூறியதாவது: தற்போது நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில், உயர் பொறுப்பில் இருக்கும் ஒருவர், இந்த ஊழலுக்கு உடந்தையாக இருந்தது கண்டறியப்பட்டு உள்ளது. பணி நியமனம் மற்றும் டெண்டர் முறைகேடு வாயிலாக வசூல் வேட்டை செய்ய, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில், உயர் பொறுப்பில் இருந்து ஓய்வுபெற்ற அதிகாரிகள் மூவர் முகவர்களாக செயல்பட்டுள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.