வாக்காளர் பட்டியல் பணியில் ஈடுபடும் தமிழக அதிகாரிகள் மீது சந்தேகமா?
சென்னை: தமிழக பா.ஜ., தலைவர் நாகேந்திரன் அறிக்கை:
தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணியை, தேர்தல் கமிஷன் துவக்கும் தகவல் வந்ததும், முதல்வர் ஸ்டாலின் அலறுகிறார். கடந்த, 2017 சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலின் போது, வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணி வேண்டும் என, உயர் நீதிமன்றத்தில் தி.மு.க., வழக்கு தொடர்ந்தது. நேரு பிரதமராக இருந்த காலம் துவங்கி, காங்கிரஸ் ஆட்சியில், 10 முறை வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணி நடந்தது. இது முதல்வர் ஸ்டாலினுக்கு தெரியாதா? தேர்தல் கமிஷனின் வழக்கமான நடைமுறையை, ஏதோ புதிய முறை போல், மக்களிடம் காட்சிப்படுத்த முயற்சிப்பது ஏன்? இந்த திருத்த பணியில் ஈடுபடும், தலைமை தேர்தல் அதிகாரி முதல், மாவட்ட கலெக்டர்கள், வருவாய் அதிகாரிகள், கிராம நிர்வாக அதிகரிகள் வரை அனைவரும், தமிழக அரசின் கீழ் பணியாற்றுவோர் தான். அப்படி என்றால், அவர்களை எல்லாம் நேர்மையற்றவர்கள் என தி.மு.க., அரசு சந்தேகிக்கிறதா? வங்கதேசத்தினர் ஊடுருவல் அதிகமாக உள்ளதால், அவர்கள் வாக்காளராவதை தடுக்கவே, வாக்காளர் பட்டியல் சீர் திருத்தம் நடத்தப்படுகிறது; தமிழக வாக்காளர்களை நீக்குவதற்கு அல்ல. மழை வெள்ள பாதிப்பு, நெல் கொள்முதல் செய்யாமை, தரமற்ற சாலைகள், பள்ளிக்கரணை ஊழல் போன்ற தி.மு.க., அரசின் முறைகேடுகளை மறைக்க, வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணியை கையில் எடுத்து, பொய்களை கூறி, திசை திருப்ப, முதல்வர் முயற்சிக்கிறார். எவ்வளவு மடைமாற்றினாலும், தி.மு.க., வின் தோல்வி நிச்சயம். தோல்விக்கு இப்போதே முதல்வர் காரணம் தேடுகிறார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.