| ADDED : மார் 29, 2025 02:36 AM
மதுரை: சிலை கடத்தல் மன்னன் தீனதயாளனுக்கு உதவியதாக முன்னாள் ஐ.ஜி., பொன்மாணிக்கவேல் மீது சி.பி.ஐ.,பதிந்த வழக்கின் மேல் விசாரணைக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ஏற்கனவே இடைக்காலத் தடை விதித்தது. இதற்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளதாக உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தெரிவித்ததையடுத்து விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி.,யாக பொன் மாணிக்கவேல் பணிபுரிந்தார் (2018ல் ஓய்வு பெற்றார்). சர்வதேச சிலை கடத்தல்காரர் தீனதயாளனை கைது செய்தார். அவரது வாக்குமூலம் அடிப்படையில், திருவள்ளூர் டி.எஸ்.பி.,யாக இருந்த காதர் பாஷா மீது பொன்மாணிக்கவேல் வழக்கு பதிந்தார்.காதர் பாஷா, 'தீனதயாளனை வழக்கு ஒன்றில் தப்பிக்க வைக்க என் மீது பொய் வழக்கு பதியப்பட்டது. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்' சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு செய்தார். அந்நீதிமன்றம், 'சி.பி.ஐ., விசாரிக்க வேண்டும். முகாந்திரம் இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என உத்தரவிட்டது. பொன்மாணிக்கவேல் மீது சி.பி.ஐ., போலீசார் வழக்கு பதிந்தனர்.ஆரம்ப கட்ட விசாரணை அறிக்கை வழங்க சி.பி.ஐ.,க்கு உத்தரவிட வேண்டும். சி.பி.ஐ., வழக்கை ரத்து செய்ய வேண்டும் என பொன்மாணிக்கவேல் உயர்நீதிமன்றக் கிளையில் மனு செய்தார். அவருக்கு எதிரான வழக்கின் மேல் விசாரணை மேற்கொள்ள, இறுதி அறிக்கை தாக்கல் செய்ய இடைக்காலத் தடை விதித்து மார்ச் 13ல் தனி நீதிபதி உத்தரவிட்டார்.நீதிபதி பி.புகழேந்தி நேற்று விசாரித்தார்.காதர் பாஷா தரப்பு வழக்கறிஞர்: உயர்நீதிமன்ற உத்தரவிற்கு எதிராக காதர் பாஷா உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.பொன்மாணிக்கவேல் தரப்பு வழக்கறிஞர்: உயர்நீதிமன்றம் விசாரணையை தொடர்ந்து நடத்த உச்சநீதிமன்ற உத்தரவு தடையாக இருக்காது. தடையை நீக்க உச்சநீதிமன்றத்தில் மனு செய்யப்படும். இவ்வாறு விவாதம் நடந்தது.நீதிபதி: உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள சூழலில் உயர்நீதிமன்றத்தில் இறுதி விசாரணை சரியாக இருக்காது. இங்கு விசாரணை நடந்தபோது காதர் பாஷா தரப்பில் ஆஜராகவில்லை. அவருக்கு உயர்நீதிமன்ற பதிவுத்துறை, மனுதாரர் சி.பி.ஐ., தரப்பில் வழக்கு ஆவணங்கள் வழங்கப்படவில்லை. இச்சூழலில் உச்சநீதிமன்றத்தை அணுகி இடைக்கால உத்தரவு பெற்றது புதுமையாக உள்ளது. விசாரணை ஏப்.16க்கு ஒத்திவைக்கப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டார்.