உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பிரசவத்துக்கு பின் பெண்கள் உயிரிழப்புக்கு ரத்தப்போக்கே 20 சதவீதம் காரணம்

பிரசவத்துக்கு பின் பெண்கள் உயிரிழப்புக்கு ரத்தப்போக்கே 20 சதவீதம் காரணம்

சென்னை: தமிழகத்தில் பிரசவத்திற்கு பிந்தைய பெண்கள் உயிரிழப்புக்கு, 39 சதவீதம் ரத்தப்போக்கும், உயர் ரத்த அழுத்தமும் காரணங்களாக உள்ள நிலையில், முன்கூட்டியே பிரசவங்களுக்கான இடங்களை தேர்வு செய்ய, பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த, மக்கள் நல்வாழ்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் பிரசவத்தின் போது, லட்சம் பேரில், 54 பேர் என்ற வகையில், மகப்பேறு இறப்பு விகிதம் உள்ளது. இந்த இறப்புகளை, மக்கள் நல்வாழ்வுத்துறை தணிக்கை செய்தது.

முக்கிய காரணம்

இதில், பிரசவத்திற்கு பிந்தைய ரத்தப்போக்கால், 20 சதவீதம்; கர்ப்பகால உயர் ரத்த அழுத்தத்தால், 19 சதவீதம்; ரத்தத்தில் கிருமி தொற்றால், 10 சதவீதம்; இதய நோயால், 9 சதவீதம்; கருக்கலைப்பால், 4 சதவீதம்; பிற நோய்களால், 38 சதவீதம் பேர் உயிரிழந்திருப்பது தெரியவந்துள்ளது.இந்நிலையில், பிரசவ கால உயிரிழப்புகளுக்கு, கிராமப்புற பகுதிகளில் முன்கூட்டியே திட்டமிடல் இல்லாதது முக்கிய காரணமாக கூறப்படுகிறது. இதனால், 72 சதவீத இறப்புகள் கிராமப் புறங்களிலும், 28 சதவீதம் நகர்ப்புறங்களிலும் நடந்து உள்ளன.இதுகுறித்து, மக்கள் நல்வாழ்வுத்துறை அதிகாரிகள் கூறியதாவது:தமிழகத்தில் மாதத்திற்கு சராசரியாக, 80,000 பிரசவங்கள் நடக்கின்றன. இதில், 40 சதவீதத்துக்கும் குறைவானவர்களே, எந்த மருத்துவமனையில் பிரசவம் பார்க்க வேண்டும் என்பதை முடிவு செய்து, அங்குள்ள மருத்துவ கட்டமைப்புகளின் விபரங்களை அறிந்து கொள்கின்றனர்.

அவசரகதி

பெரும்பாலானோர் வலி ஏற்பட்ட பின் தான், அவசரகதியில் மருத்துவமனைக்கு செல்கின்றனர். ஆரம்ப சுகாதார நிலையங்களில், இரவு டாக்டர்கள் இல்லை என்றாலும், நர்ஸ்கள் பிரசவம் பார்க்கின்றனர். அந்த பிரசவம் இக்கட்டான நிலைக்கு மாறும் போது, அவர்களால் கையாள முடியாத நிலையில், மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை அல்லது மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கின்றனர். இந்த இடைப்பட்ட நேரம் தான், உயிர்இழப்புக்கு முக்கிய காரணமாகிறது.

அறிவுறுத்தல்

எனவே, ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு வரும் கர்ப்பிணியருக்கு, தாங்கள் பிரசவம் பார்க்க வேண்டிய மருத்துவமனையை, முன்கூட்டியே உறுதிப்படுத்தி கொள்ளும் வகையில், அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த செவிலியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட பாதிப்புகள் இருப்பவர்களை, அறுவை சிகிச்சை அரங்கம் மற்றும் பச்சிளம் குழந்தை பராமரிப்புடன் கூடிய மருத்துவமனைக்கு மட்டுமே பிரசவத்திற்கு பரிந்துரைக்க வேண்டும். அவர்களுக்கான பிரசவங்களை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் மேற்கொள்ள வேண்டாம் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை