பிளஸ் 2 கணக்கு பதிவியல் தேர்வில் கால்குலேட்டர் பயன்படுத்த அனுமதி பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு
சென்னை: தமிழக அரசு பாடத்திட்டத்தில், பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 படிக்கும் மாணவ - மாணவியருக்கான பொதுத்தேர்வு அட்டவணையை, பள்ளிக்கல்வி துறை அமைச்சர் மகேஷ் நேற்று வெளியிட்டார். அப்போது, 'முதல் முறையாக, பிளஸ் 2 கணக்கு பதிவியல் தேர்வில், கால்குலேட்டர் பயன்படுத்த அனுமதிக்கப்பட உள்ளது' என்று தெரிவித்தார். பள்ளிக்கல்வி துறை அமைச்சர் மகேஷ், சென்னை கோட்டூர்புரம் அண்ணா நுாற்றாண்டு நுாலகத்தில், பொதுத்தேர்வு அட்டவணையை வெளியிட்டார். அடுத்த ஆண்டு மார்ச் 2 முதல் 26ம் தேதி வரை பிளஸ் 2 தேர்வுகளும்; மார்ச் 11 முதல் ஏப்., 6ம் தேதி வரை 10ம் வகுப்பு தேர்வுகளும் நடைபெற உள்ளன. அரியர் தேர்வு மொத்தம் 7,513 பள்ளிகளை சேர்ந்த 8.07 லட்சம் மாணவர்கள் பிளஸ் 2 தேர்வையும், 12,485 பள்ளிகளை சேர்ந்த 8.70 லட்சம் மாணவர்கள், 10ம் வகுப்பு தேர்வையும் எழுத உள்ளனர். அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்க உள்ள நிலையில், தேர்தல் கமிஷனுடன் ஆலோசித்து இந்த பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. வழக்கத்திற்கு மாறாக, பிளஸ் 2 தேர்வுகள் நடக்கும் போதே, 10ம் வகுப்பு தேர்வுகளும் நடைபெற உள்ளன. பிளஸ் 1 அரியர் தேர்வுகள், மார்ச் 3 முதல் 17ம் தேதி வரை நடக்கும். மே 8ல் பிளஸ் 2; மே 20ல் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 அரியர் தேர்வு முடிவுகள் வெளியாகும். பொதுத்தேர்வு அட்டவணையை வெளியிட்ட பின், அமைச்சர் மகேஷ் அளித்த பேட்டி: மாநில கல்விக் கொள்கையின்படி, இந்த ஆண்டு முதல் பிளஸ் 1 மாணவ - மாணவியருக்கு பொதுத்தேர்வு கிடையாது. கடந்த முறை தேர்வில் தோல்வி அடைந்தவர்களுக்கு மட்டும் தேர்வு நடத்தப்படும். அனுமதி
பொதுத்தேர்வை நினைத்து மாணவர்கள் பதற்றம் அடையாமல், உற்சாகத்தோடு பங்கேற்க வேண்டும். இந்த ஆண்டு முதல் முறையாக, பிளஸ் 2 கணக்கு பதிவியல் தேர்வு எழுதுவோர், சாதாரண கால்குலேட்டர் வைத்துக்கொள்ள அனுமதி வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். அப்போது, பள்ளிக்கல்வி துறை செயலர் சந்திரமோகன், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி துறை மாநில திட்ட இயக்குநர் ஆர்த்தி, மாதிரி பள்ளிகள் செயலர் சுதன், பள்ளிக்கல்வி இயக்குநர் கண்ணப்பன், அரசு தேர்வுகள் துறை இயக்குநர் சசிகலா ஆகியோர் உடனிருந்தனர்.