சமையலர் வேலை தருவதாக ரூ.65 லட்சம் மோசடி செய்த மாஜி மந்திரி மீது வழக்கு
சேலம் : அரசு வேலை வாங்கி தருவதாகக் கூறி, 65 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் மற்றும் அவரது மகளிடம், லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.சேலம், அஸ்தம்பட்டி ஜான்சன்பேட்டை கிழக்கு தெருவைச் சேர்ந்தவர் முனுசாமி. இவர் இரு ஆண்டுகளுக்கு முன், சேலம் மாநகர போலீஸ் கமிஷனரிடம் புகார் மனு அளித்திருந்தார். அதில், அவர் கூறியுள்ளதாவது:கடந்த 2013ல் சேலம் மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்த வெங்கடேசன், ஆதிதிராவிட நலத்துறை அமைச்சராக இருந்த சுப்பிரமணியிடம் என்னை அறிமுகம் செய்து வைத்தார்.அமைச்சர் என்னிடம், 'ஆதிதிராவிடர் நலத்துறையில் காலியாக உள்ள சமையல் பணிக்கு, 80 பேரை எடுப்பதாகவும், அதில் 20 பேருக்கு சேலம் மாவட்டத்தில் பணி வழங்க உள்ளதாகவும், நேரடியாக பணியில் அமர்த்த ஒருவருக்கு, 3 லட்சம் ரூபாய் யார் தருவரோ அவர்களுக்கு உடனடி பணி வழங்கப்படும்' என்றார்.அமைச்சரின் வார்த்தையை நம்பி, 20 பேரிடம் இருந்து, 65 லட்சம் ரூபாய் வாங்கி, முன்னாள் அமைச்சர் சுப்பிரமணியிடம் கொடுத்தேன். இந்த பணத்தை அவர் தன் மகளிடம் கொடுத்தார். பணத்தைப் பெற்று பல மாதங்களாகியும், வேலை வாங்கித் தராமல் அலைய வைத்தனர்.இதற்கிடையே, 2016 சட்டசபை தேர்தலில், அவருக்கு எம்.எல்.ஏ., சீட் கிடைக்காததால், வேலையும் வாங்கி தரவில்லை; பணமும் தரவில்லை.சென்னை வேளச்சேரியில் முன்னாள் அமைச்சர் தன் குடும்பத்தினருடன் இருந்தார். அங்கு சென்று பணம் கேட்டபோது, 23 லட்சம் ரூபாயை தந்தார்; மீதி தொகை, 42 லட்சம் ரூபாயை தரவில்லை. கேட்டதற்கு கொலை மிரட்டல் விடுத்தார். எனவே, முன்னாள் அமைச்சர் சுப்பிரமணி, அவரது மகள் மீது நடவடிக்கை எடுத்து, பணத்தை மீட்டுத் தர வேண்டும்.இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.இது தொடர்பாக சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீசார், முன்னாள் அமைச்சர் சுப்பிரமணியன், அவரது மகள் லாவண்யா ஆகியோரிடம் விசாரித்தனர். இந்நிலையில், இந்த வழக்கு லஞ்ச ஒழிப்பு துறைக்கு மாற்றப்பட்டது.சுப்பிரமணியன், புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையைச் சேர்ந்தவர். அவரிடமும், மகள் லாவண்யாவிடமும், சேலம் லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி., கிருஷ்ணராஜன் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.இது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'இந்த வழக்கு சம்பந்தமாக, சமீபத்தில் எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. பழைய வழக்கு தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது' என்றனர்.