அனுமதியின்றி போராட்டம் அண்ணாமலை மீது வழக்கு
சென்னை:அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை உட்பட, 1,077 பேர் மீது, போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.'டாஸ்மாக்' நிறுவனத்திற்கு மதுபானங்கள் கொள்முதல் செய்தில், 1,000 கோடி ரூபாய் ஊழல் நடந்து இருப்பதாக, அமலாக்கத் துறை கூறியுள்ளது. இந்த விவகாரத்தில், அரசை கண்டித்து, தமிழக பா.ஜ., சார்பில், சென்னை எழும்பூரில் உள்ள, டாஸ்மாக் தலைமை அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நேற்று முன்தினம் நடத்தப்பட்டது.இப்போராட்டத்தில் பங்கேற்க வீட்டில் இருந்து புறப்பட்ட, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, முன்னாள் கவர்னர் தமிழிசை உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். எழும்பூர் ராஜரதத்தினம் ஸ்டேடியம் முன் திரண்ட பா.ஜ., மூத்த தலைவர்கள் பொன் ராதாகிருஷ்ணன், எச்.ராஜா உள்ளிட்டோரும் கைது செய்யப்பட்டு, பல மணி நேரத்திற்கு பின் விடுவிக்கப்பட்டனர். சட்டம் - ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில், அனுமதியின்றி போரட்டத்தில் ஈடுபட்டதற்காக, அண்ணாமலை உள்ளிட்ட, 1,077 பா.ஜ.,வினர் மீது, போலீசார் நேற்று வழக்குப்பதிவு செய்துள்ளனர்.