சென்னை- -- செங்கோட்டை பயணிகள் ரயிலை மீண்டும் இயக்க கோரிக்கை
வடமதுரை : தமிழகத்தில் பாசஞ்சர் ரயில்களை காட்டிலும் எக்ஸ்பிரஸ், சூப்பர் பாஸ்ட் என அதிவேக ரயில்களின் ஆதிக்கம் அதிகம். இவற்றில் வெகுசில ரயில்களில் முன்பதிவு டிக்கட் விற்கப்படுகிறது. ஆன்-லைன் டிக்கட்கள் சில மணி நேரத்தில் தீர்ந்துவிடுகிறது. வசதியற்ற மக்கள், திடீர் பயணமாக புறப்படுபவர்கள் எக்ஸ்பிரஸ் ரயில்களின் பொதுப்பெட்டிகளில் நெருக்கடியில் பயணிக்கின்றனர்.1998 வரை திண்டுக்கல்- - திருச்சி இடையே மீட்டர்கேஜ் வழித்தடமாக இருந்த வரை சென்னை-- செங்கோட்டை ரயில்கள் இயக்கப்பட்டன. அகலப்பாதை பணிக்காக இந்த ரயில்கள் நிறுத்தப்பட்டன. இந்த ரயில்கள் சென்னையிலிருந்து விழுப்புரம், கடலுார், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், ராஜபாளையம், தென்காசி வழியே செங்கோட்டை வரை 109/110 எண்ணுடன் இயக்கப்பட்டன.2022 முதல் செங்கோட்டை - மயிலாடுதுறை பயணிகள் ரயில் இயக்க துவங்கியுள்ளது. இது செங்கோட்டையில் காலை 7:05 மணிக்கு புறப்பட்டு மாலை 4:00 மணிக்கு மயிலாடுதுறை செல்கிறது. இதையே நீடிப்பு செய்து சென்னை செங்கோட்டை ரயிலாக மீண்டும் இயக்கலாம். இதுகுறித்து ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்.