முதல்வர் ஸ்டாலின் பழனிக்கு பாத யாத்திரை செல்வார்: பா.ஜ.,
சென்னை: விஷ்வ ஹிந்து பரிஷத் வடதமிழகம், தென்சென்னை கிழக்கு மாவட்டம் சார்பில், ஹிந்து சமுதாய ஒற்றுமை பொதுக்கூட்டம், நீதிமன்ற அனுமதி பெற்று, சென்னை நங்கநல்லுாரில் நேற்று நடந்தது. இதில், வி.எச்.பி., மாநில தலைவர் ஆண்டாள் சொக்கலிங்கம் பேசியதாவது:பிரதமர் மோடியை, 'பீஸ் பீஸ்' ஆக்குவேன் என்று கூறியவர், இந்த தொகுதி எம்.எல்.ஏ., அன்பரசன். வரும் தேர்தலில் அவருக்கு, அவரது கட்சி தலைமை இந்த தொகுதியை ஒதுக்க வேண்டும். அதில், அவரை படுதோல்வி அடைய வைப்போம். இவ்வாறு அவர் பேசினார்.தமிழக பா.ஜ., பொதுச்செயலர் ராம சீனிவாசன் பேசியதாவது:ஒரே ஒரு தேர்தலில், ஹிந்து, ஹிந்துவாக ஓட்டு போட்டால் போதும். ஹிந்துக்களின் உணர்வுகளின் மட்டம் உயர்ந்தால், நடவடிக்கைகள் நமக்கு சாதகமாக திரும்பும். இந்தியாவில் மட்டும் தான் சிறுபான்மையினருக்கு கொடுக்கும் சலுகைகளை, பெரும்பான்மையான நமக்கும் வழங்க வேண்டும் என்று கேட்கிறோம். இதற்கு காரணம் ஹிந்து ஹிந்துவாக ஓட்டளிக்காததுதான். ஒருமுறை ஹிந்துவாக ஓட்டளித்து பார்த்தால், தி.மு.க.,வின் செயல்பாடு மாறும். ஸ்டாலின் பழனி பாதயாத்திரை செல்வார். கனிமொழி பூக்குழி இறங்குவார். உதயநிதி திருப்பதிக்கு மொட்டை போடுவார்.இவ்வாறு அவர் பேசினார்.