குழந்தைகளின் வயிறு நிறைகிறது; அறிவு வளர்கிறது காலை உணவு திட்டம் குறித்து முதல்வர் பெருமிதம்
சென்னை : 'காலை உணவுத் திட்டத் தால், பள்ளி குழந்தைகளின் வயிறு நிறைகிறது; அறிவு வளர்கிறது' என, முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தி.மு.க., தொண்டர்களுக்கு, அவர் எழுதிஉள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: காமராஜர் ஆட்சியில், தமிழகத்தில் உள்ள பள்ளி மாணவர்களின் பசி தீர்க்கும் வகையில், மதிய உணவு திட்டம் கொண்டு வரப்பட்டது. ஏழை மாணவர்கள் பெரும் பயனடைந்தனர். எம்.ஜி.ஆர்., ஆட்சியில், சத்துணவு திட்டமாக மாற்றப்பட்டது. கருணாநிதி ஆட்சியில் முட்டையுடன் கூடிய, நிறைவான சத்துணவு திட்டமாகியது. கடந்த 2022 செப்., 15ல், மதுரையில் ஆதிமூலம் மாநகராட்சி துவக்கப் பள்ளியில், காலை உணவு திட்டத்தை துவக்கி வைத்தேன். அடுத்த கட்டமாக, மாநகராட்சி மற்றும் நகராட்சிப் பகுதிகளில் உள்ள, 433 அரசு துவக்கப் பள்ளிகளில், 56,160 மாணவர்கள் பயன்பெறும் வகையில், காலை உணவு திட்டம் விரிவாக்கப்பட்டது. அடுத்து ஊரகப் பகுதிகளில், அரசு உதவி பெறும் துவக்கப் பள்ளிகளில், காலை உணவு திட்டம் செயல்படுத்தப்பட்டது. தற்போது, 34,987 துவக்கப் பள்ளிகளில், 17.53 லட்சம் மாணவர்கள், சத்தான காலை உணவுடன், தெம்பாகக் கல்வி கற்று வருகின்றனர். அடுத்த கட்டமாக, காலை உணவு திட்டம், நகர்ப்புற பகுதிகளில் உள்ள, அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு, விரிவாக்கம் செய்யப்படுகிறது. வரும் 26ம் தேதி, சென்னை மயிலாப்பூர் மண்டலம், புனித சூசையப்பர் துவக்கப் பள்ளியில் இத்திட்டத்தை பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் துவக்கி வைக்க உள்ளார். இதன் வாயிலாக, நகர்ப்புறம் சார்ந்த 2,429 பள்ளிகளில், ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும், 3.06 லட்சம் மாணவ-, மாணவியர் பயன் பெறுவர். காலை உணவு திட்டத்தை விரிவாக்கம் செய்யும் போதெல்லாம், பள்ளிக் குழந்தைகளின் வயிறு நிறைகிறது. அவர்களின் அறிவு வளர்கிறது. பெற்றோரின் மனதில் மகிழ்ச்சி புன்னகை மலர்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
20.59 லட்சம் பேர்
பயன் பெறுவர்
நீதிக்கட்சி முதல் நமது அரசு வரை, பள்ளிக் குழந்தைகளுக்கு உணவளித்து, வயிற்றுப் பசியை போக்கி, அறிவுப்பசிக்கு கல்வி வழங்குகிறோம். இது உணவு மட்டுமல்ல. உயர்வுக்கான உரம். நாளை நகர்ப்புறங்களில் உள்ள, அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும், முதல்வரின் காலை உணவு திட்டத்தை விரிவாக்கம் செய்கிறோம். காலை உணவு திட்டத்தில் இனி 20.59 லட்சம் மாணவ, மாணவியர் பசியாறுவர். நாட்டுக்கே முன்னோடியாக திகழும், நமது பணிகள் தொடரும். தமிழகம் நாளும் உயரும். - ஸ்டாலின், தமிழக முதல்வர்